சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள கடைசி லீக் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாட உள்ளது.
ஐபிஎல் தொடரின் 61வது லீக் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடுகிறது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 7 தோல்வி, 5 வெற்றிகளுடன் உள்ளது. இதனால் இனி வரும் 2 போட்டிகளிலும் வெற்றிபெறுவதோடு, மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியையும் கணக்கிட்டால் மட்டுமே அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு நீடிக்கும். இதனால் வாழ்வா, சாவா போட்டியில் கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.

இன்னொரு பக்கம் சென்னை அணி 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 4 தோல்விகளுடன் 15 புள்ளிகள் எடுத்து பிளே ஆஃப் சுற்றில் ஒரு கால் பதித்துள்ளது. இன்றையப் போட்டியில் வெற்றிபெற்றால் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறுவதோடு, பிளே ஆஃப் சுற்று வாய்ப்பையும் உறுதி செய்யும். அதுமட்டுமல்லாமல் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள கடைசி லீக் போட்டி என்பதால் சென்னை அணி வெற்றியுடன் முடிக்க தீவிரமாக இருக்கும்.
கொல்கத்தா அணியை பொறுத்தவரை எந்த வீரரும் சீரான பேட்டிங்கை வெளிப்படுத்தாததே, அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. ஆனால் பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி, சுயாஷ் சர்மா மற்றும் சுனில் நரைன் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகிறார். பலமான சுழற்பந்துவீச்சு கூட்டணியை கேகேஆர் அணி வைத்துள்ளதால், சென்னை அணிக்கு சவாலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் சென்னை அணியை பொறுத்தவரை கான்வே, ருதுராஜ், ரஹானே, துபே, தோனி என்று அபாரமான பேட்டிங் வரிசை உள்ளது. அனைத்து வீரர்களும் ஃபார்மில் இருப்பதால், எந்த வீரராலும் தனியாளாக போராடி வெற்றிபெற வைக்க முடியும். அதேபோல் பந்துவீச்சில் பதிரானா, துஷார் தேஷ்பாண்டே, ஜடேஜா, மொயின் அலி, சஹர் உள்ளிட்டோர் சரியான ஃபார்மில் இருக்கிறார்கள்.
இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியை வீழ்த்துவது எந்த அணிக்கும் எவ்வளவு சாதாரணமாக இருக்காது. இருப்பினும் இன்றையப் போட்டியில் சென்னை அணியின் பென் ஸ்டோக்ஸ் களமிறக்கப்படுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதுவரை சென்னை - கொல்கத்தா அணிகள் மோதிய 27 போட்டிகளில் 18ல் சென்னை அணியும், 9ல் கொல்கத்தா அணியும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.