செஸ்: 8 வயதில் உலகின் 7ஆம் நிலை வீரரை வீழ்த்தி தமிழ் அமுதன் சாதனை.. மின் தடையை மீறி வென்று அசத்தல்
சென்னை: சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் கனமழை பெய்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அப்பகுதி இருளில் மூழ்கியது. ஆனால் ஓர் எளிமையான வீட்டில், எட்டு வயது சிறுவன் தமிழ் அமுதன், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், மொபைல் டார்ச் உதவியுடன் தனது மடிக்கணினியில் 'பிரீஸ்டைல் ஃபிரைடே' ஆன்லைன் சதுரங்கப் போட்டியில் கலந்துகொண்டான்.
மறுமுனையில், உலகத் தரவரிசையில் 7ஆம் இடத்திலிருந்த, 2759 எலோ புள்ளிகள் கொண்ட வின்சென்ட் கீமர் இருந்தார். மடிக்கணினியை மடியில் வைத்துக் கருப்பு காய்களுடன் விளையாடிய , அமுதன் தான ஜெர்மன் வீரரான கீமரை 'பிரீஸ்டைல் ஃபிரைடே' முதல் சுற்றிலேயே திகைக்க வைத்தார்.

பல புகழ்பெற்ற வீரர்கள் பங்கேற்கும், பிரபலமான வாராந்திர 11 சுற்று ஸ்விஸ் முறை பிளிட்ஸ் போட்டியான இதில், தமிழ் அமுதன் தனது மடிக்கணினி பேட்டரி தீரும் முன், மேலும் நான்கு சுற்றுகள் விளையாடி, அவற்றில் இரண்டில் வெற்றியும் பெற்றார்.
9 வயதுக்குட்பட்ட பிரிவில் உலக நம்பர் 1 வீரரான தமிழ் அமுதன், கடந்த பிப்ரவரியில் 2000 எலோ ரேட்டிங் புள்ளிகளைக் கடந்த இளம் வீரர் ஆவார். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த இவன், ஹாட்சன் செஸ் அகாடமியில் பயிற்சி பெற, தனது சொந்த ஊரிலிருந்து 350 கி.மீ தொலைவில் உள்ள திருத்தங்கலில் கடந்த ஓராண்டாக வசித்து வருகிறான்.
இது குறித்து பேசிய தமிழ் அமுதன் தந்தை சதீஷ் ஆறுமுகம், மின்சாரம் இல்லாமல் அவர்கள் எவ்வாறு சமாளித்தார், ஆன்லைனில் நீடிக்க அலைபேசியின் ஹாட்ஸ்பாட் மூலம் இண்டர்நெட்டை பயன்படுத்தியது குறித்து விளக்கினார்.
"மாலை 6 மணிக்கு அகாடமியில் இருந்து திரும்பியபோதுதான் கனமழையால் மின்சாரம் தடைபட்டது," என்றார் சதீஷ். "இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கியது, மடிக்கணினியில் 48% சார்ஜ் மட்டுமே இருந்தது. எனவே, மூன்று அல்லது நான்கு போட்டிகளை மட்டுமே விளையாட முடியும் என எண்ணினோம்."
இந்த சூழலால் தமிழ் அமுதன் ஆர்வம் சிறிதும் குறையவில்லை என்பதை சதீஷ் வெளிப்படுத்தினார். "மின் தடை அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை. பேட்டரி தீரும்வரை முடிந்தவரை விளையாட வேண்டும் என்று அமுதன் விரும்பினான்," என்றார் அவர்.
"பிளிட்ஸ் விளையாட்டு அவனுக்கு மிகவும் பிடிக்கும். வின்சென்ட் கீமர் போன்ற ஒரு வீரரை வெல்வது, அவருக்கு 14 வினாடிகள் மட்டுமே எஞ்சி இருந்த நிலையில், அமுதனுக்கு ஒரு நிமிடம் இருந்ததில், மிகவும் சந்தோஷமாக உணர்ந்தான். எங்கள் கடின உழைப்புக்கான இந்த பலன் மிகவும் பெருமையளித்தது," என்று பெருமையுடன் சதீஷ் கூறினார்.
"இது ஒரு மகிழ்ச்சியான உணர்வு. இல்லை, மின்சாரம் போனபோது நான் கவலைப்படவில்லை," என்று அமுதன் கூறிவிட்டு, சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான ஐபிஎல் போட்டியைப் பார்க்கச் சென்றான்.
நான்கு வயதிலேயே சதுரங்க விளையாட்டிற்குள் நுழைந்த தமிழின் பயணத்திற்கு குடும்பம் ஏராளமான தியாகங்களைச் செய்துள்ளது. பெற்றோர் சொந்த வீட்டிலிருந்து சுமார் 350 கி.மீ தொலைவில் உள்ள திருத்தங்கலில், இவனுடன் மாறி மாறி வந்து தங்குகின்றனர். கடந்த ஓராண்டில், தமிழன் 27வது ஆசிய இளைஞர் சதுரங்க சாம்பியன்ஷிப் 2025-ல் நான்கு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். மழை, இடி இவரைத் தடுக்க முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications