20 வீரர்கள் உயிரிழப்பு
இந்திய எல்லையில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எதிர் தரப்பிலும் உயிரிழப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், எல்லையில் பதற்றம் காணப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாதவகையில் நடைபெற்றுள்ள இந்த தாக்குதலையடுத்து, சீனப் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்ற நிலைப்பாடு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
ஆண்டிற்கு ரூ.440 கோடி வருமானம்
இந்திய கிரிக்கெட் உலகின் அடையாளமாக ஐபிஎல் போட்டிகள் கருதப்படுகின்றன. கொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ள இந்த போட்டிகளின் முக்கிய ஸ்பான்சராக சீன நிறுவனமான விவோ இருந்து வருகிறது. இதன்மூலம் பிசிசிஐக்கு ஆண்டிற்கு 440 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துவரும் நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு போடப்பட்டுள்ள இதன் ஒப்பந்தம் வரும் 2022 வரை உள்ளது.
ரத்து செய்யும் எண்ணம் இல்லை
இந்நிலையில், சீன நிறுவனமான விவோவின் ஸ்பான்சர்ஷிப்பை இந்த ஆண்டு ரத்து செய்யும் எண்ணம் இல்லை என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு அதுகுறித்து பரிசீலிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். சீன நிறுவனமாக இருந்தாலும் அதிலிருந்து வரும் நிதி, இந்தியாவின் நலனுக்காகவே பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பகுத்தறிவை உபயோகிக்க வேண்டும்
இந்த விஷயத்தில் உணர்ச்சிவசப்படாமல், பகுத்தறிவை நாம் உபயோகிக்க வேண்டும் என்று அருண் துமால் தெரிவித்துள்ளார். இங்கு தங்களுடைய பொருட்களை விற்று நமது மக்களின் பணத்தை பெறும் அந்த சீன நிறுவனம், தங்களது பணத்தை இங்கேயே ஸ்பான்சர் செய்வதும் அதிலிருந்து 42 சதவிகிதம் வரியாக அரசுக்கு பிசிசிஐ செலுத்துவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்தியாவில் செலவழிக்கப்படுகிறது
தங்களது மொபைல் பொருட்களை விளம்பரப்படுத்துவதற்காக ஐபிஎல்லில் அந்த நிறுவனம் ஸ்பான்சர் செய்வதை சுட்டிக் காட்டியுள்ள துமால், அவ்வாறு இல்லாவிட்டால், அந்த நிதி, அவர்களது நாட்டிற்கு எடுத்து செல்லப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அவ்வாறில்லாமல், இந்தியர்களிடம் இருந்து பெறப்படும் அந்த பணம், இந்தியாவிலேயே செலவழிக்கப்படுவது சிறப்பானது என்றும் துமால் கூறியுள்ளார்.