பெங்களூர்: கடந்த ஜூன் நான்காம் தேதி சின்னசாமி மைதானத்தின் வாயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த நிலையில், அது குறித்த விசாரணை நடைபெற்று வந்தது. அதன் முடிவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் சமர்ப்பித்த இந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய விவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி தான் முழு முதல் பொறுப்பை ஏற்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025 ஐபிஎல் தொடரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வென்ற நிலையில், அதற்கு மறு தினமே சின்னசாமி மைதானத்தில் பிரம்மாண்டமான வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவசரகதியில் நடத்தப்பட்ட இந்த வெற்றி விழா ஏற்பாட்டின் போதுதான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மாலை 4 மணி அளவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் சார்பில் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது.

அதில் சின்னசாமி மைதானத்தில் வெற்றி விழா நடைபெற இருப்பதாகவும், அதற்கான டிக்கெட்டுகள் இருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. அதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரசிகர்கள் ஒரே நேரத்தில் மைதானத்திற்கு படையெடுத்தனர். அந்த நேரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.
இது குறித்து மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அளித்துள்ள அறிக்கையில், "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் மூன்று முதல் ஐந்து லட்சம் பேர் அந்த இடத்தில் கூடுவதற்கு முதல் பொறுப்பு என்று தெரிகிறது. ஆர்சிபி அணி காவல்துறையிடம் உரிய அனுமதியை அல்லது ஒப்புதலைப் பெறவில்லை. அவர்கள் திடீரென்று சமூக ஊடகங்களில் மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சி பற்றி பதிவிட்டனர். அதன் காரணமாக பொதுமக்கள் ஒரே நேரத்தில் அந்த இடத்தில் ஒன்று கூடினர்."
"ஜூன் 4 அன்று நேர பற்றாக்குறை இருந்ததால், காவல்துறையினரால் உரிய ஏற்பாடுகளைச் செய்ய முடியவில்லை. அவர்களுக்கு போதுமான நேரம் வழங்கப்படவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எந்த முன் அனுமதியும் இல்லாமல் இந்த விஷயத்தைச் செய்தது."
"காவல்துறை ஊழியர்களும் மனிதர்கள் தான்; அவர்கள் கடவுள் அல்ல, மந்திரவாதியும் அல்ல. மேலும் ஒரு விரலை தேய்த்தால் மட்டுமே விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய அலாவுதீன் போன்ற மந்திர சக்திகளும் அவர்களிடம் இல்லை," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் காவல்துறையினருக்கு சாதகமாகவும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராகவும் இந்த அறிக்கை அமைந்துள்ளது. இந்த அறிக்கையின் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சிக்கலில் உள்ளது. ஐபிஎல் நிர்வாகம் அந்த அணியைத் தடை செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.