கிறிஸ் கெய்ல் விலகல்
இந்த நிலையில் எஞ்சிய ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து விலகுவதாக கிறிஸ் கெய்ல் அறிவித்துள்ளார். ஐ.பி.எல் முடிந்தவுடன் உடனடியாக டி20 உலகக் கோப்பை தொடர் ஆரம்பமாகிறது. டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து விலகுவதாக கிறிஸ் கெய்ல் அறிவித்து இருக்கிறார். கிறிஸ் கெய்ல் திடீர் விலகல் ஏற்கனேவே இந்த தொடரில் தள்ளாடி வரும் பஞ்சாப் கிங்ஸ்சுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
பஞ்சாப் கிங்ஸ்
''டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு பங்களிப்பு செய்ய நான் கவனம் செலுத்த விரும்புகிறேன், துபாயில் ஓய்வு எடுக்க விரும்புகிறேன். எனக்கு ஓய்வு அளித்த பஞ்சாப் கிங்ஸுக்கு நன்றி. எனது விருப்பமும் நம்பிக்கையும் எப்போதும் அணியுடன் இருக்கும்'' என்று கெய்ல் கூறியுள்ளார்.
கிறிஸ் கெய்ல் முடிவை அணி மதிக்கிறது என்று பஞ்சாப் கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
முடிவை மதிக்கிறோம்
இது தொடர்பாக அவர் கூறுகையில், ' நான் கிறிஸுக்கு எதிராக விளையாடியுள்ளேன், பஞ்சாப் கிங்ஸில் அவருக்கு பயிற்சியளித்திருக்கிறேன், பல வருடங்களாக அவரை அறிந்திருக்கிறேன், அவர் எப்போதும் ஒரு முழுமையான கிரிக்கெட் வீரராக இருந்துள்ளார். ஒரு அணியாக நாங்கள் அவரது முடிவை மதிக்கிறோம்'' என்று கூறியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி சதீஷ் மேனன் கூறுகையில், "டி20 கிரிக்கெட் விளையாட்டின் தன்மையை கிறிஸ் கெய்ல் மாற்றியுள்ளார். அவருடைய முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம். அவர் பஞ்சாப் கிங்ஸ் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார், அவருடைய விலகல் எங்களுக்கு இழப்புதான். நாங்கள் அவருக்கு அனைத்து ஆதரவையும் வழங்குகிறோம். அவர் டி20 உலககோப்பையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
இதுதான் கடைசி ஐ.பி.எல்
நடப்பு சீசனில் துபாயில் நடக்கும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்காக 2 போட்டிகளில் மட்டுமே கெய்ல் விளையாடி இருக்கிறார். இதில் பெரிதாக சோபிக்கவில்லை. கிரிஸ் கெய்ல் விலகல் அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியள்ளது. டி20 உலக்கோப்பை தொடர் முடிந்தவுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்தும், ஐ.பி.எல் உள்ளிட்ட போட்டிகளில் இருந்தும் 42 வயதான கிறிஸ் கெய்ல் ஓய்வு பெறுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.