ஐபிஎல் திருவிழா: கெய்ல் சிக்ஸர் மழை... கொல்கத்தாவை சாய்த்தது பெங்களூர்!!

ஐபிஎல் சீஸன் 4 போட்டியின் 15-வது நாளான நேற்று கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டேனியல் வெட்டோரி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் ஜெயித்த பெங்களூர் அணி முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய பணித்தது.
இதை தொடர்ந்து முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் களம் இறங்கிய வீரர்கள் அனைவரும் தங்களது கணிசமான பங்களிப்பைத் தந்தனர்.
தொடக்க ஆட்டக்காரர்கள் பிராட் ஹேடின் 18 ரன்களிலும், காலிஸ் 40 ரன்களிலும் அவுட் ஆனார்கள். பின்னர் கேப்டன் கவுதம் கம்பீரும், யூசுப்பதானும், அணி சவாலான ஸ்கோரை எட்ட துணை புரிந்தனர்.
கம்பீர் 48 ரன்களும், யூசுப் பதான் 46 ரன்களும் விளாசினர். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது.
கெய்ல் ரன் மழை...
அடுத்து 172 ரன்கள் இலக்கை நோக்கி பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்லும், தில்ஷனும் களம் இறங்கினர்.
முதல் 3 ஓவர்கள் (17 ரன்) நிதானம் காட்டிய இவர்கள், அதன் பிறகு கொல்கத்தாவின் பந்து வீச்சை சிதறடிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக கெய்ல், சிக்சருக்கும் பவுண்டரிக்குமாக பந்தை நொறுக்கியெடுத்தார். இவர் அடித்த ஒரு பந்து 104 மீட்டர் தூரத்தில் போய் விழுந்தது. இந்த ஐ.பி.எல்.-ல் அடிக்கப்பட்ட மெகா சிக்சர் இதுதான்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 123 ரன்கள் (12.1 ஓவர்) சேர்த்து அணியின் வெற்றியை சுலபமாக்கியது. தில்ஷன் 38 ரன்களில் (31 பந்து, 6 பவுண்டரி), பாலாஜியின் பந்து வீச்சில் கிளீன்போல்டானார்.
அடுத்து விராட் கோஹ்லி வந்தார். அவரும் கெய்லுடன் சேர்ந்து, கொல்கத்தா பவுலர்களை கடுப்பேற்றினார். கெய்ல் சதத்தை நெருங்கிய போது, அணியின் இலக்கும் நெருங்கியது.
கடைசி 18 பந்துகளில் பெங்களூர் அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கெய்ல் சதத்திற்கு 2 ரன்கள் தேவையாக இருந்தது.
18-வது ஓவரை இக்பால் அப்துல்லா வீசிய போது, முதல் பந்தில் விராட் கோஹ்லி பவுண்டரி அடித்து விட்டார். இதனால் கெய்ல் சதம் அடிக்கும் வாய்ப்பு நழுவி போய் விடுமோ? என்ற கேள்வி எழுந்தது. இதன் பிறகு விராட் கோஹ்லி சுதாரித்து கொண்டு அடுத்த 5 பந்துகளை தடுத்து ஆடினார். என்றாலும் அதிலும் வைடு வகையில் ஒரு ரன் கிடைத்தது.
இதன் பின்னர் 12 பந்துகளில் அணியின் வெற்றிக்கு ஒரு ரன்னும், கெய்லின் சதத்திற்கு 2 ரன்னும் தேவைப்பட்டது. 19-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ஷகிப் அல்-ஹசன் வீசினார். இதில் முதல் பந்தை கெய்ல் பவுண்டரிக்கு அனுப்பி அணியை வெற்றி பெற வைத்ததுடன், தனது சதத்தையும் நிறைவு செய்தார்.
பெங்களூர் அணி 18.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கெய்ல் 102 ரன்களுடனும் (55 பந்து, 10 பவுண்டரி, 7 சிக்சர்), விராட் கோக்லி 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கெய்ல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்த பெங்களூருக்கு இது 2-வது வெற்றியாகும். அதே சமயம் 6-வது லீக்கில் ஆடிய கொல்கத்தா அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:46 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications