லண்டன்: கிரிக்கெட் உலகில் மிகவும் அரிய நிகழ்வான, பந்து வீச்சை ஆரம்பித்ததும் முதல் 3 பந்துகளில் 3 விக்கெட் வீழ்த்திய சம்பவம் மீண்டும் ஒருமுறை நடந்துள்ளது.
இங்கிலாந்து கவுன்டி அணியான ஒர்செஸ்டெர்ஷயர் பந்து வீச்சாளர் ஜோ லீச், நார்த்தாம்ப்டன்ஷயர் அணிக்கு எதிரான போட்டியின்போது பந்து வீச்சைத் தொடங்கியதுமே 3 விக்கெட்களை அடுத்தடுத்த பந்துகளில் வீசி அசத்தினார்.

இவரது பந்து வீச்சில், ரிச்சர்ட் லெவி, ராக் கியோ, பென் டக்கெட் ஆகியோர் ஆட்டமிழந்தனர். முதல் இருவரையும் விக்கெட் கீப்பர் பென் காக்ஸ் கேட்ச் செய்தார். கடைசி நபரை ஜேக் ஷான்ட்ரி கேட்ச் செய்தார்.
கிரிக்கெட் உலகில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறுவது மிக மிக அரிதாகும். இதற்கு முன்பு இலங்கை வீரர் சமிந்தா வாஸ், 2003ல் நடந்த உலகக் கோப்பைப் போட்டியின்போது வங்கதேச அணிக்கு எதிராக பந்து வீசியபோது முதல் 3 பந்துகளில் விக்கெட் சாய்த்து சாதனை நடத்தினார். அதற்கு முன்பும் இதுபோல நடந்ததில்லை. பின்னரும் நடந்ததில்லை. தற்போது வாஸ் போல பந்து வீசி சாதனை படைத்துள்ளார் இந்த இங்கிலாந்து வீரர்.