டிரினிடாட்: 2025 கரீபியன் பிரீமியர் லீக் (CPL) தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரும், அதிரடி மன்னனுமான கீரான் பொல்லார்ட், தனது பழைய ஆட்டத்தை மீண்டும் ஒருமுறை அரங்கேற்றி, கிரிக்கெட் உலகை மிரள வைத்துள்ளார். செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், வெறும் 8 பந்துகளில் 7 சிக்ஸர்களை விளாசி, மைதானத்தையே அதிர வைத்தார்.
டிரினிடாட் நைட் ரைடர்ஸ் (TKR) அணிக்காக விளையாடி வரும் பொல்லார்ட், திங்கட்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில், தனது விஸ்வரூபத்தைக் காட்டினார். ஆட்டத்தின் 15-வது ஓவரில், நவின் பிடைசியின் கடைசி நான்கு பந்துகளில் மூன்று சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அதைத் தொடர்ந்து, அடுத்த ஓவரை வீசிய வக்கா சலாம்கெய்லின் பந்துவீச்சில், அடுத்தடுத்து நான்கு பந்துகளிலும் சிக்ஸ் விளாசி எதிரணியை நிலைகுலையச் செய்தார்.

இந்த சிக்ஸர் மழையின் மூலம், வெறும் 21 பந்துகளில் தனது அரைசதத்தைக் கடந்தார் பொல்லார்ட். இது டி20 கிரிக்கெட்டில் அவரது 64-வது அரைசதமாகும். இந்தப் போட்டியில் 65 ரன்கள் குவித்ததன் மூலம், இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்திற்கும் முன்னேறியுள்ளார்.
சமீபத்தில்தான், டி20 கிரிக்கெட்டில் 14,000 ரன்களைக் கடந்த கிறிஸ் கெய்லுக்குப் பிறகு, உலகின் இரண்டாவது வீரர் என்ற சாதனையை பொல்லார்ட் படைத்தார். அவருக்குப் பின், அவரது அணி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸும் இந்த ஜாம்பவான் பட்டியலில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
2010 முதல் 2022 வரை, 13 சீசன்களாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் கீரான் பொல்லார்ட். ஐபிஎல்-லிருந்து ஓய்வு பெற்றபோது, அவர் மிகவும் உருக்கமாக ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், "மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இனி விளையாட முடியாது என்றால், அந்த அணிக்கு எதிராக விளையாடுவதையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியாது. ஒருமுறை மும்பை இந்தியன்ஸ் வீரராகிவிட்டால், எப்போதும் மும்பை இந்தியன்ஸ் வீரர்தான்!" என்று குறிப்பிட்டிருந்தார்.
ஐபிஎல்-லிருந்து ஓய்வு பெற்றாலும், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அவர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். 38 வயதானாலும், தனது சிக்ஸர் அடிக்கும் திறமை மட்டும் கொஞ்சம் கூட குறையவில்லை என்பதை பொல்லார்ட் இந்த ஆட்டத்தின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார். அவரது இந்த அதிரடியை, மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.