டெல்லி: ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான முன்னாள் நீதிபதி முட்கல் கமிட்டியின் இறுதி விசாரணை அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
6வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் 2 நபர்களை கொண்ட விசாரணை குழுவை அமைத்தது. அந்த குழு மீது நம்பிக்கையில்லை என்று கூறி, பீகார் கிரிக்கெட் சங்க செயலாளர் ஆதித்ய வர்மா என்பவர், 2013ம் ஆண்டு ஜூன் மாதம் பாம்பே ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுமீது விசாரணை நடத்திய ஹைகோர்ட்டும், பிசிசிஐ விசாரணை குழு சட்ட விரோதமானது என்று அறிவித்தது. இதை எதிர்த்து பிசிசிஐ உச்ச நீதிமன்றம் சென்றது. ஆனால் அங்கும், பிசிசிஐக்கு எதிராகவே உத்தரவு வந்தது.
ஓய்வு பெற்ற ஹைகோர்ட்டு நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான 3 பேர் விசாரணை கமிஷன் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த கமிட்டி தனது இடைக்கால அறிக்கையை சீல் வைக்கப்பட்ட கவரில் அடைத்து முட்கல் கமிட்டி கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில், பிசிசிஐ தலைவராக இருந்த என்.சீனிவாசன், மருமகன் குருநாத் மெய்யப்பன் உள்பட 13 நபர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து மார்ச் 28ம் தேதி, சீனிவாசனை, பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்த உச்ச நீதிமன்றம், சுனில் கவாஸ்கர் மற்றும் சிவ்லால் யாதவ் ஆகியோர் அப்பதவியில் நியமித்தது. ஐபிஎல் விவகாரங்களின் பொறுப்பு கவாஸ்கருக்கும், பிற போட்டிகளின் பொறுப்பு யாதவுக்குமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதனையடுத்து தொடர்ந்து விசாரணை நடத்திய நீதிபதி முட்கல் கமிட்டி தனது இறுதி அறிக்கையை இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை இம்மாதம் 10ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வர உள்ளது..
இந்த விசாரணை கமிஷன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், முக்கிய கிரிக்கெட் வீரர்கள் பெயர்களும் இருப்பதாக கூறப்படுகிறது. 10ம்தேதி விசாரணை ஆரம்பிக்கும்போது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயல் வீசக்கூடும் என்று தெரிகிறது.