புவனேஸ்வர் காயம்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மிக முக்கிய போட்டியில் 3 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில், காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டு வெளியேறினார் புவனேஸ்வர் குமார். அந்தப் போட்டியில் விஜய் ஷங்கர் ஹர்திக் பண்டியா ஓவர்களை வைத்து சமாளித்தார் கேப்டன் கோலி.
ஷமிக்கு வாய்ப்பு
அடுத்த போட்டியில் நிச்சயம் புவனேஸ்வர் குமாருக்கு மாற்றாக ஒரு முழு நேர வேகப் பந்துவீச்சாளர் தேவை எனும் நிலையில், மாற்று வீரரான முகமது ஷமியை அணியில் சேர்த்தனர். ஷமியின் பந்துவீச்சு திறன் சமீப காலங்களில் பெரிதாக வளர்ந்து இருப்பதாக முன்னாள் வீரர்கள் கூறியும், அவர் மாற்று வீரராகவே அணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பான பந்துவீச்சு
தன் திறமையை நிரூபித்துக் காட்ட கிடைத்த வாய்ப்பில் கலக்கினார் ஷமி. ஆப்கானிஸ்தான் போட்டியில் மிகக் குறைந்த ஸ்கோர் அடித்த இந்திய அணியை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு பந்துவீச்சாளர்கள் தோளில் விழுந்தது.
ஹாட்ரிக் எடுத்த ஷமி
அந்தப் போட்டியில் பும்ரா, ஷமி இருவரும் கட்டுக் கோப்பாக வீசிய துவக்க ஓவர்களும், இறுதி ஓவர்களும் தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஷமி கடைசி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து போட்டியை முடித்து வைத்தார். அந்தப் போட்டியில் 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.
மீண்டும் வந்த புவனேஸ்வர்
இந்த நிலையில், இந்தியா அடுத்து ஆடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் போட்டிக்கான பயிற்சிகளில் காயத்தில் இருந்து மீண்ட புவனேஸ்வர் குமாரும் ஈடுபட்டார். இதனால், அவர் அடுத்த போட்டியில் பங்கேற்க தயாராகி விட்டார் என்கிறார்கள். இது கேப்டன் விராட் கோலிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
என்ன குழப்பம்?
ஆப்கானிஸ்தான் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஷமியா? அல்லது இங்கிலாந்து ஆடுகளத்தின் தன்மையை சாதகமாக பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யும் புவனேஸ்வர் குமாரா? யாரை அணியில் தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறார் கோலி.
சச்சின் பதில்
இது குறித்து தொலைக்காட்சியில் பேசிய சச்சின், புவனேஸ்வர் குமார் பந்தை நன்றாக ஸ்விங் செய்வார். வெஸ்ட் இண்டீஸ் டாப் ஆர்டரை அவர் சிக்கலில் ஆழ்த்துவார். அதனால் அவரை தான் தேர்வு செய்வேன் என்று கூறி ஆச்சரியம் அளித்தார்.
ரசிகர்கள் முடிவு
காரணம், புவனேஸ்வர் குமாரை விட ஷமி குறைந்த போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். மேலும், அவரை விட குறைந்த அளவே ரன்கள் விட்டுக் கொடுக்கிறார். அதனால், ரசிகர்கள் பலரும் புவனேஸ்வர் குமாரை விட ஷமி தான் அணிக்கு தேவை என கூறி வருகின்றனர். சச்சின், பொதுவான கருத்தில் இருந்து மாறுபட்டு, தன் அனுபவத்தின் மூலம் புவனேஸ்வர் குமாரை தேர்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.