கேள்வி
இதுவரை கிரிக்கெட் வர்ணனை செய்திராத, சச்சின் தன் ஓய்வுக்குப் பின் பல வருடங்கள் கழித்து முதன்முறையாக வர்ணனை செய்ய வந்தார். இந்தப் போட்டிக்கு நடுவே நடப்பு உலகக்கோப்பை தொடரில் கலக்கப் போகும் இந்தியர் அல்லாத பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வி சச்சினிடம் கேட்கப்பட்டது.
டேவிட் வார்னர்
சச்சின் டேவிட் வார்னர் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பார் என கூறினார்.கடந்த ஐபிஎல் தொடரில் இந்தியாவில் கடுமையான வெயில் அடித்த போதும், அந்த சூழ்நிலையை சமாளித்து, நல்ல உடற்தகுதியோடு வார்னர் இருந்ததாக குறிப்பிட்டார்.
ஜோப்ரா ஆர்ச்சர்
உலகக்கோப்பையில் எந்த பந்துவீச்சாளர் சிறப்பாக செயல்படப் போகிறார் என்ற கேள்விக்கு சிந்தனைக்குப் பின் ஜோப்ரா ஆர்ச்சரை தேர்வு செய்தார். அதே சமயம் ரஷித் கானும் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது என அவரை அடுத்தகட்ட தேர்வாக கூறினார்.
என்ன சொன்னார்?
இதில் தன் முதல் விருப்பமாக சச்சின் தேர்வு செய்த ஜோப்ரா ஆர்ச்சர் குறித்து அவர் கூறுகையில், "நான் ஜோப்ரா ஆர்ச்சரை விளையாடுவதை பார்க்க விரும்புவேன். அவர் பேட்ஸ்மேனை கட்டுப்படுத்துகிறார். இங்கிலாந்து அணிக்கு விக்கெட் தேவைப்பட்டால், அவரிடம் பந்தை கொடுப்பார்கள்" என்றார்.
சில நிமிடங்களில்..
அவர் சொல்லி முடித்த அடுத்த சில நிமிடங்களில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சின் போது ஜோப்ரா ஆர்ச்சர் சிறப்பாக பந்துவீசி தென்னாப்பிரிக்கா அணியின் 2 விக்கெட்களை முதல் பத்து ஓவர்களுக்குள் சாய்த்து அசத்தினார்.
ஆச்சரியம்
மேலும், போட்டி முடிவில் மொத்தமாக 3 விக்கெட்கள் எடுத்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். சச்சின் சொல்லி முடித்த சில நிமிடங்களிலேயே ஆர்ச்சர் சிறப்பாக செயல்பட்டது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
சும்மாவா?
சச்சின்னா சும்மாவா? என சச்சின் ரசிகர்கள் இணையத்தில் காலரை தூக்கி விட்டுக் கொண்டார்கள். இத்தனைக்கும் சச்சின் முதன்முறையாக வர்ணனை மற்றும் ஒரு கிரிக்கெட் தொடரின் விவாதத்தில் கலந்து கொள்கிறார். அதிலேயே, அவரது வாக்கு உண்மையாகி இருக்கிறது.
ஜோப்ரா ஆர்ச்சர் கலக்கி விட்டார். ரஷித் கான், டேவிட் வார்னர் உலகக்கோப்பை தொடரில் சச்சின் கூறியது போல கலக்குவார்களா?