விதி என்ன?
பிசிசிஐ விதிப்படி வெளிநாட்டில் நடைபெறும் தொடர்களில் கிரிக்கெட் வீரர்கள் முதல் இரண்டு வாரங்களுக்கு தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை தங்களோடு வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. மொத்தமாக 15 நாட்கள் மட்டுமே உடன் இருக்க அனுமதி உண்டு.
அனுமதி கேட்டார்
இந்த நிலையில், உலகக்கோப்பை தொடருக்கு முன் ஒரு மூத்த வீரர் தன் மனைவி தன்னுடன் உலகக்கோப்பை தொடர் முழுவதும் இருக்க அனுமதி அளிக்குமாறு கேட்டுள்ளார். அப்போது பிசிசிஐ அதிகாரிகள் இது குறித்து விவாதித்து உள்ளனர்.
அனுமதி மறுப்பு
பின்னர், விதிப்படி இதை அனுமதிக்க முடியாது எனக் கூறி மே மாதம் மூன்றாம் தேதி நடந்த பிசிசிஐ கூட்டத்தில் அவருக்கு அனுமதி மறுத்துள்ளனர். ஆனால், இதை அவர் கண்டு கொள்ளவில்லை என்பதே தற்போது கூறப்படும் குற்றச்சாட்டு.
நடந்தது என்ன?
உலகக்கோப்பை தொடர் நடந்த ஏழு வாரங்களும் அந்த குறிப்பிட்ட மூத்த வீரர் தன் மனைவியுடன் தங்கி உள்ளார். மற்ற வீரர்கள் அனுமதிக்கபட்ட காலத்தில் மட்டுமே தங்கள் குடும்பத்தினரை வரவழைத்தனர். அந்த ஒரு வீரர் மட்டும் எப்படி குடும்பத்துடன் இருந்தார் என்று கேட்கிறது பிசிசிஐ.
கேப்டன் அனுமதி அளித்தாரா?
கேப்டன் மற்றும் பயிற்சியாளர் அனுமதி அளித்தால் குறிப்பிட்ட காலத்தை தாண்டியும் ஒரு வீரர் தன் குடும்பத்தினர், நண்பர்களை பார்க்கலாம் என ஒரு விதி உள்ளது. அதன்படி பார்த்தால், அந்த வீரர் கோலி, ரவி சாஸ்திரியிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும். ஆனால், அவர்களிடமும் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.
யார் அந்த வீரர்?
உலகக்கோப்பை தொடரில் மற்ற வீரர்களைக் காட்டிலும் அதிக நாட்கள் தங்கள் குடும்பத்தினருடன் இருந்த மூத்த வீரர்கள் தோனி மற்றும் ரோஹித் சர்மா. தோனியின் மனைவியின் உறவினர்கள் லண்டனில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, அவர் அங்கே தங்கி இருந்து இந்தியா ஆடும் போட்டிகளை காண வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
ரோஹித் சர்மாவா?
அப்படி என்றால் ரோஹித் சர்மா தான் அந்த மூத்த வீரர் என சில ரசிகர்கள் கருதுகிறார்கள். ரோஹித் சர்மா உலகக்கோப்பை தொடர் முடிந்த உடன் மற்ற வீரர்களுக்கு முன் தன் குடும்பத்தினருடன் இந்தியா திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.