கிரிக்கெட் வீரர் பிரவீன்குமாரின் உறவுக்காரர் சுட்டுக் கொலை!
லக்னோ: கிரிக்கெட் வீரர் பிரவீன்குமார் உறவுக்காரர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளரான பிரவீன் குமார் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். அவரது உறவினர் தேவேந்திரா அம்மாநிலத்தின் ஷாம்லி மாவட்டத்திலுள்ள கிராமத்தில், மருத்துவராக பணியாற்றி வந்தார்.
நேற்றிரவு இவர் தனது கிளினீக்கில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது, அதே ஊரை சேர்ந்த பங்கஜ் என்பவர் கை துப்பாக்கியுடன், மருத்துவமனைக்குள் நுழைந்து, தேவேந்திராவை பார்த்து சரமாரியாக சுட ஆரம்பித்தார்.

அதில், மூன்று குண்டுகள் தேவேந்திரா உடலில் புகுந்தன. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தேவேந்திரா உயிரிழந்தார். தேவேந்திராவின் சகோதரரை, பங்கஜ் கொலை செய்த வழக்கில் தேவேந்திராதான் கண்ணால் கண்ட சாட்சியமாம். இந்த வழக்கில், சிறையில் இருந்த பங்கஜ் கடந்த 5 நாட்கள் முன்புதான் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.
எனவே சாட்சியாக இருந்த தேவேந்திராவை சுட்டுக் கொலை செய்துள்ளார் பங்கஜ். இந்த சம்பவம் அக்கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கூடுதல் போலீஸ் எஸ்.பி, மிஸ்ரா தலைமையில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications