பேஸ்புக் லைவ் சாட்டில் ரோகித்
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியுள்ள விளையாட்டு வீரர்களை சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவை நேரலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்து வருகின்றன. இதேபோல இந்திய கிரிக்கெட்டின் துவக்க ஆட்டக்காரர் பேஸ்புக் நேரலையில், வங்கதேச வீரர் தமிம் இக்பாலுடன் கலந்துரையாடினார்.
எப்பவுமே ஒரு கிங்
இந்த நேரலையில் ரோகித் சர்மா மற்றும் தமிம் இக்பால் இருவரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அப்போது இருவரும் தங்களுக்கு பிடித்தமான கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ என்று சிலாகித்தனர். ரோகித் சர்மா கூறுகையில், போர்ச்சுகல் கால்பந்தாட்ட வீரரான ரொனால்டோ எப்போதும் ஒரு கிங்காக செயல்படுபவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய சாதனைகள் வியப்பானவை
ரொனால்டோ குறித்து பெருமையடன் பேசிய ரோகித் சர்மா கூறுகையில், யாருக்குதான் ரொனால்டோவை பிடிக்காது என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் எப்போதுமே ஒரு கிங் என்று கூறியுள்ள ரோகித், அவருடைய கேரியரில் அவர் புரிந்துள்ள சாதனைகள் அனைத்தும் வியப்பானவை மற்றும் பாராட்டுக்குரியவை என்றும் தெரிவித்துள்ளார்.
வாய்ப்புகளை சாதனைகளாக மாற்றியவர்
அவருடைய ஆரம்ப கால வாழ்க்கை அவ்வளவு எளிதாக அமையவில்லை என்றும் மிகவும் கடினமானது என்றும் கூறியுள்ள ரோகித் சர்மா, தங்களுடைய கடினமான ஆரம்ப காலங்களை வெற்றிகரமாக கடந்து, தங்களுக்கு கிடைத்த வாய்ப்பககளை சாதனைகளாக மாற்றிக் காட்டிய இத்தகைய வீரர்கள் மிகுந்த பாராட்டுக்கு உரியவர்கள் என்றும் ரோகித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.