லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் கொடுத்த கேட்ச் கேமரூன் க்ரீனால் சரியாக பிடிக்கப்பட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த இந்திய ரசிகர்கள், சீட்டர்.. சீட்டர் என்று கோஷம் எழுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுவதற்கு 444 ரன்களை ஆஸ்திரேலிய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 418 ரன்களே இதுவரை வெற்றிகரமாக சேஸிங் செய்யப்பட்ட இலக்காகும். இதனால் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த சாதனை இலக்கை இந்திய அணி எப்படி சேஸ் செய்யும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. தொடக்கம் முதலே இருவரும் பவுண்டரிகளை விளாசி வந்தனர். ரோகித் சர்மாவை வீழ்த்த ஷார்ட் பால்களை ஸ்டார்க் வீசிய நிலையில், அந்த பந்துகளை சிக்சரும், பவுண்டரியாய் ரோகித் சர்மா வெளுத்து வாங்கினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
இந்த நிலையில் போலாந்த் வீசிய பந்து சுப்மன் கில் பேட்டில் பட்டு எட்ஜாகியது. அதனை 3வது ஸ்லிப்பில் நின்றிருந்த கேமரூன் க்ரீன் அசாத்தியமாக பிடித்தார். ஆனால் அந்த கேட்ச் சரியாக பிடிக்கப்பட்ட என்று மூன்றாம் நடுவரால் சோதனை செய்யப்பட்டது. அதில் கேமரூன் க்ரீன் கையோடு இருந்த பந்தை தரையில் பட்டது போல் இருந்தது. ஆனால் மூன்றாம் நடுவரால் அவுட் கொடுக்கப்பட்டதால், சுப்மன் கில் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் ரோகித் சர்மா களத்திலேயே அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதேபோல் கேமரூன் க்ரீன் பிடித்த கேட்ச் சர்ச்சையாகியுள்ளது. மூன்றாம் நடுவரின் தீர்ப்பால் அதிருப்தியடைந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர்களை பார்த்து, "சீட்டர்.. சீட்டர்" என்று கோஷம் எழுப்ப தொடங்கினார். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.