சென்னை: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ஆயுஷ் மத்ரே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கடந்த போட்டியில் தனக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு பேட் மூலம் அவர் பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர்களுக்குதான் அவர் இந்த ஆட்டத்தை ஆடிக் காண்பித்து இருக்கிறார்.
2026 ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய ஆட்டத்தில் சிஎஸ்கே அதிரடியாக ஆடியது. இதில் இளம் வீரர் ஆயுஷ் மத்ரே களமிறங்கியது முதலே பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டார். மற்ற அனுபவ வீரர்களான சஞ்சு சாம்சன், பிரெவிஸ் ஆகியோர் சற்று குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் சேர்த்த நிலையில், ஆயுஷ் மத்ரே மட்டும் மைதானத்தின் நாலாபுறமும் பந்தை சிதறடித்தார். இவரது இந்த அதிரடி ஆட்டம் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் மளமளவென உயர முக்கிய காரணமாக அமைந்தது.

ஆயுஷ் மத்ரேவின் இந்த ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு பின்னணியில் ஒரு கசப்பான சம்பவம் உள்ளது. இதற்கு முந்தைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக சென்னை விளையாடிய போது, ஆயுஷ் மத்ரே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்திருந்தார். இருப்பினும், கடைசி ஓவர்களில் ரன் குவிக்க அவர் சற்று திணறினார். இதனால் அதிருப்தி அடைந்த சிஎஸ்கே பயிற்சியாளர்கள், அவரை 'ரிட்டையர் அவுட்' முறையில் ஆடுகளத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டனர்.
பாதி ஆட்டத்திலேயே வெளியேற்றப்பட்டதால் ஆயுஷ் மத்ரே பெரும் ஏமாற்றம் அடைந்தார். போட்டிக்கு பிறகு சிஎஸ்கே நிர்வாகத்தின் முடிவை அவர் ஏற்றுக்கொள்வதாக கூறினாலும், அந்த அவமானம் அவர் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.
இதற்கு அடுத்த போட்டியிலேயே கொல்கத்தா அணிக்கு எதிராக தனது திறமையை நிரூபிக்க ஆயுஷ் மத்ரே காத்திருந்தார். "எனது ரன் குவிக்கும் வேகம் தான் உங்களுக்கு பிரச்சனை என்றால், அது எப்படி இருக்கும் என்று பாருங்கள்" என சவால் விடுவது போல அவரது ஆட்டம் அமைந்தது. அந்த போட்டியில் வெறும் 17 பந்துகளை எதிர்கொண்ட அவர் 38 ரன்கள் குவித்தார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும். இவரது ஸ்டிரைக் ரேட் 223 ஆக இருந்தது.
அதே போட்டியில் சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 48 ரன்கள் (ஸ்டிரைக் ரேட் 150) எடுத்தார். அதிரடி வீரர் டிவால்ட் பிரெவிஸ் 29 பந்துகளில் 41 ரன்கள் (ஸ்டிரைக் ரேட் 141) எடுத்தார். இவர்கள் இருவரையும் விட மிக அதிக வேகத்தில் ரன் சேர்த்த ஆயுஷ் மத்ரே, தன்னை வெளியேற்றிய சிஎஸ்கே பயிற்சியாளர் மற்றும் நிர்வாகத்திற்கு பேட் மூலம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். இந்த இளம் வீரரின் துணிச்சலான ஆட்டம் சென்னை ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. ஆயுஷ் ஆட்டமிழந்த உடன் சிஎஸ்கே அணியின் ரன் குவிக்கும் வேகம் குறைந்ததே 200 ரன்களை எடுக்காததற்கு முக்கிய காரணம் ஆகும். எனினும், இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி சொதப்பலாக பேட்டிங் 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை அடுத்து சிஎஸ்கே அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
