கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ரன் ரேட்டும் எகிறியதுடன், 10 புள்ளிகளை பெற்ற சிஎஸ்கே அணி, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
பவுண்டரி எல்லைக் கோடு சிறிய அளவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கேகே ஆர் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்ற கட்டத்தில் களமிறங்கிய சிஎஸ்கே அணி, பவர்பிளே முடிவில் 59 ரன்கள் சேர்த்தது.
ருதுராஜ் கெய்க்வாட் 35 ரன்களும், கான்வே 56 ரன்களும் எடுத்து, நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். இதனை பயன்படுத்தி கொண்ட ரஹானேவும், சிவம் துபேவும், ஸ்ரீஹரிகோட்டா ஏவுத்தளத்தில் ராக்கெட்டுகள் விடப்படுவது போல், சிக்சர்களை பறக்கவிட்டனர். இந்த ஜோடி மட்டும் 10 சிக்சர்களை விளாசியது.

இதனால் ரஹானே 2.0 வெர்சன், 29 பந்துகளில் 71 ரன்களும், சிவம் துபே 21 பந்துகளில் 50 ரன்கள் அடித்தனர். இறுதியில் ஜடேஜாவும் தன் பங்கிற்கு 2 சிக்சர்கள் அடிக்க, சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 235 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை எடுத்தது. இது நடப்பு தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். இந்த இன்னிங்சில் சிஎஸ்கே வீரர்கள் மொத்தமாக 18 சிக்சர்களை அடித்தனர்.
இதன் மூலம் சிஎஸ்கே அணி இன்று பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறது. நடப்பு சீசனில் ஒரு அணி அதிக ஸ்கோர் அடித்திருப்பது இந்த போட்டியில் தான். இது ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அடித்துள்ள மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
இதனையடுத்து 236 ரன்களை துரத்தி புதிய சாதனை படைக்க வேண்டிய நெருக்கடியில் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ஜெகதீசன் 1 ரன்னிலும், சுனில் நரைன் டக் அவுட்டாகவும் வெளியேற கேகேஆர் அணி 1 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர் 20 ரன்களும், நிதிஷ் ரானா 27 ரன்களும் அடிக்க சிஎஸ்கே 70 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
அப்போது ஜோடி சேர்ந்த ரிங்கு சிங் மற்றும் ஜேசன் ராய் ஜோடி, திடீரென்று சிக்சர்கள் , பவுண்டரிகளாக விளாசினர். இதனால் ஆட்டத்தில் சுவாரஸ்யம் ஏற்பட்டது. 19 பந்துகளில் ஜேசன் ராய் அரைசதம் கடந்தார். இதனால், இவர் ஆட்டத்தை தனியாக மாற்றிவிடுவார் என்பதால், இவருடைய விக்கெட்டை வீழ்த்த சிஎஸ்கே மெனகிட்டது.
26 பந்துகளில் 61 ரன்கள் விளாசிய ஜேசன் ராய், 5 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் விளாசிய நிலையில், தீக்சனா பந்துவீச்சில் போல்ட் ஆனார். இது சிஎஸ்கேவின் வெற்றி வாய்ப்பை உறுதி ஆக்கியது. இதனால் கேகேஆர் அணிக்கு கடும் அழுத்தம் ஏற்பட, ரஸிலும் 9 ரன்களில் பதிரானா பந்தில் கேட்ச் ஆனார்.
கடைசி 18 பந்தில் 72 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரிங்கு சிங் மட்டும் தனியாக போராடினார். 35 பந்துகளில் அவர் அரைசதம் கடந்தார். இதனால் 20 ஓவர் முடிவில் கேகேஆர் அணி 186 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழந்தது. இதன் மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே, புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.