
பேட்ஸ்மேன்களை குழப்பிய பிராவோ
ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, பேட்டிங்கை தொடங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் சாஹா, சாஹர் வீசிய மூன்றாவது ஓவரில், 2 மெகா சிக்ஸர்களை சாஹா பறக்கவிட்டார். மற்றொரு தொடக்க வீரர் ஜேஸன் ராய் பொறுமையாக இன்னிங்ஸை தொடங்கினார். இந்நிலையில், ஆட்டத்தின் 4வது ஓவரை ஹேசில்வுட் வீசினார். இதில் அந்த ஓவரின் மூன்றாவது பந்தில், எட்ஜ் ஆகி தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஜேஸன் ராய். இதனால், ஹைதராபாத் தனது முதல் மற்றும் முக்கிய விக்கெட்டை இழந்தது. இதன் பிறகு கேப்டன் கேன் வில்லயம்சன் களமிறங்கினார். 11 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த வில்லியம்சன், பிராவோ ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார். ஆட்டத்தின், 6.3வது பந்தில் ஆஃப் சைடில் மிக மோசமான, வைட் பந்து ஒன்றை பிராவோ வீசினார். அந்த பந்துக்கு நோ-பால் கூட கொடுத்திருக்கலாம். அந்தளவுக்கு மோசமான வைட் பந்து. ஆனால், அம்பயர் வைட் மட்டுமே கொடுத்தார். அதற்கு அடுத்த பந்தை மெதுவாக 129 கி.மீ வேகத்தில் யார்க்கராக பிராவோ வீச, அவ்வளவு பொறுமையான பந்தை வில்லியம்சன் எதிர்பார்க்கவில்லை. பந்து நேராக அவரது பேடில் பட, அம்பயர் எந்தவித யோசனையும் இன்று அவுட் கொடுத்துவிட்டார். இதனால், ரிவ்யூ எடுக்கலாம் என்று சாஹா ஆலோசனை கொடுக்க, அதனை கேன் மறுத்துவிட்டார். ரிவ்யூ எடுத்தால் நிச்சயம் அது வீணாய் போகும் என்பதை உணர்ந்த வில்லியம்சன் அதனை தவிர்த்துவிட்டார்.

சிக்கன பந்துவீச்சு
இதன் பிறகு, ஹைதராபாத் அணியால் ரன்கள் குவிக்கவே முடியவில்லை. ரன் ரேட்டும் குறைவாகவே சென்றது. எப்போதாவது ஒன்றிரண்டு சிக்ஸர்கள் அடித்தார்களே தவிர, கன்சிஸ்டன்ஸியாக ரன்கள் சேர்க்க முடியவில்லை. இளம் வீரர் ப்ரியம் கார்க் 7 ரன்களிலும், அபிஷேக், சமத் தலா 18 ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேஸன் ஹோல்டர் வெறும் 5 ரன்களில் பிராவோ ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் ஹேசில்வுட் 4 ஓவர்கள் வீசி, 24 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிராவோ நான்கு ஓவர்கள் வீசி, 17 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ எப்படி சிறப்பாக பந்து வீசியிருக்கிறார் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
4-0-25-3
4-0-24-3
4-0-17-2

வேகம் குறைக்காத கெய்க்வாட்
இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஓப்பனர்கள் டு பிளசிஸ், கெய்க்வாட் சற்று பொறுமையாக ஆட்டத்தை தொடங்கினார்கள். 3 ஓவர்கள் வரையில் மயான அமைதி நிலவியது. 3 ஓவர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன் பிறகு தான் இருவரும் வேலையைக் காட்டத் தொடங்கினார்கள். 4வது ஓவரை வீசிய புவனேஷை 2 சிக்ஸர்கள் அடித்து வரவேற்றனர் டு பிளசிஸும், கெய்க்வாடும். அந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள். பிறகு ஹோல்டர் ஓவரில் 9 ரன்கள், ரஷீத் கான் வீசிய முதல் ஓவரில் 11 ரன்கள் என்று 6 ஓவர்களில் விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். எனினும், சிறப்பாக ஆடிவந்த ருதுராஜ் கெய்க்வாட் 38 பந்துகளில் 45 ரன்களில், ஹோல்டர் பந்துவீச்சில் கேட்ச்சானார். இதில், 4 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும்.

ரசிகர்கள் அன்பு குறையல
எனினும், டு பிளசிஸ் தனது வேகத்தை குறைக்கவே இல்லை. ஹைதரபாத் பவுலர்களின் தவறான பந்துகளை அவர் விட்டு விளாச தவறவில்லை. கெய்க்வாட் அவுட்டான பிறகு ரன் ரேட் சற்று குறைந்ததே தவிர, விக்கெட் விழாமல் மொயீன் அலி - டு பிளசிஸ் பார்ட்னர்ஷிப் பார்த்துக் கொண்டது. எனினும், ரஷீத் கான் ஓவரில், மொயீன் அலி போல்டாகி வெளியேறினார். பந்தை அவர் நன்றாக அடித்த போதிலும், அது அவரது காலில் பட்டு, ஸ்டெம்பில் பட்டதால், மொயீன் அலி அவுட்டாக நேரிட்டது. இதனால், அவர் 17 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் பிறகு களமிறங்கியது சின்ன தல சுரேஷ் ரெய்னா. அவர் இந்த பட்டத்தை இழந்து ரொம்ப நாள் ஆகியிருந்தாலும், ரசிகர்களுக்கு அவர் மீதான அன்பு இன்னமும் குறையவில்லை. ஆனால், அவரது மோசமான ஃபார்ம் அப்படியே தான் இருக்கிறது. வெறும் 2 ரன்னில் அவர் ஹோல்டர் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

சென்னை வெற்றி
இதன் பிறகு, ஆட்டத்தில் மற்றொரு திருப்புமுனையாக, அதே ஹோல்டர் ஓவரில் டு பிளசிஸ் 41 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேற, அப்போது தான் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும்,டார்கெட் குறைவாக இருந்த காரணத்தினால், ஹைதராபாத் அணியால் அதற்கு மேல் நெருக்கடி கொடுக்க முடியவில்லை. இதனால், சென்னை அணி 19.4வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. கேப்டன் தோனி, கடைசி ஓவரில் அவுட் ஆஃப் தி ஸ்டேடியம் சிக்ஸ் விளாசி வெற்றியை உறுதி செய்தார். இந்த வெற்றியின் மூலம், 2021 ஐபிஎல் தொடரில் முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.


Click it and Unblock the Notifications











