சென்னை: டெல்லி அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் சால்ட் இருவரும் தீபக் சஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர்.
ஐபிஎல் தொடரின் 55வது லீக் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்துள்ளது.

கடந்த சில ஆட்டங்களில் சேப்பாக்கம் மைதானத்தில் 200 ரன்களுக்கும் மேல் ரன்கள் சேர்க்கப்பட்டு வந்த நிலையில், இந்தப் போட்டியில் சென்னை அணி 167 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் டெல்லி அணியின் டாப் ஆர்டர் வீரர்களும் அபாரமான ஃபார்மில் இருக்கிறார்கள். இதனால் பவர் பிளே ஓவர்களில் குறைந்தது 2 விக்கெட்டுகளையாவது வீழ்த்த வேண்டிய தேவை எழுந்தது.
இந்த நிலையில் சென்னை அணி சார்பாக முதல் ஓவரை தீபக் சஹர் வீசினார். அதில் 2வது பந்திலேயே டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் ரன் ஏதும் எடுக்காமல் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல் சால்ட் 17 ரன்களில் சஹர் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள தீபக் சஹர் பந்துவீச்சில் ஸ்விங் அதிகளவில் இல்லாமல் இருந்தது. ஆனால் மும்பை அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதன் மூலம் 579 நாட்களுக்கு பின் பவர் பிளே ஓவரில் தீபக் சஹர் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அதேபோல் இன்றைய ஆட்டத்திலும் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தி மிரட்டியுள்ளார். பவர் பிளே ஓவர்களில் சென்னை அணி அதிக ரன்களை விட்டுக்கொடுத்து வந்த நிலையில், தீபக் சஹர் அதனை கட்டுப்படுத்தி வருவது சென்னை அணிக்கு சாதகத்தை ஏற்படுத்தியுள்ளது.