சென்னை : ஐபிஎல் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் குஜராத்திடம் சென்னை அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம், தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாதது தான். தற்போது சென்னை அணியில் பிரிட்டோரியஸ் என்ற தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் மட்டும் தான் இருந்தார்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் காயமடைந்த ஜேமிசனுக்கு பதிலாக தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் மகாலா சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது செம பார்மில் இருக்கும் மகாலா, அண்மையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கினார்.

இந்த நிலையில் தற்போது நெதர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி ஏய்டன் மார்க்கரத்தின் அதிரடி சதத்தால் 370 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணியும் ரன் குவிப்பில் ஈடுபட்டது.
ஆனால் தென்னாப்பிரிக்க அணியில் இடம்பிடித்துள்ள சிஎஸ்கே வீரர் மகாலா, அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை அள்ளினார். மகாலாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அந்த அணி வீரர்கள் தடுமாறினர். இதனால் நெதர்லாந்து அணி 224 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. சிறப்பாக பந்துவீசிய மகாலா 9 ஓவரில் 43 ரன்களை விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஏற்கனவே நேற்று நியூசிலாந்துக்கு எதிராக சூப்பர் ஓவரில் சிறப்பாக பந்துவீசி இலங்கை அணியின் சிஎஸ்கே வீரர் தீக்சனா அசத்திய நிலையில், தற்போது மகாலாவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதனால் இவ்விரு வீரர்களும் வந்த உடன் சிஎஸ்கேவின் பந்துவீச்சு பலமாகி விடும்.