சென்னை: ஐபிஎல் வரலாற்றில் 19 மற்றும் 20 ஆகிய ஓவர்களில் மட்டும் ஆயிரம் ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை சென்னை அணியின் கேப்டன் தோனி படைத்துள்ளார்.
16வது ஐபிஎல் சீசன், சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என்றே ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே வெளிமாநிலங்களில் சென்னை அணி விளையாடும் போட்டிகளுக்கு கூட அம்மாநில ரசிகர்கள் மஞ்சள் ஜெர்சியில் வந்து ஆதரவு அளித்து வருகின்றனர். பெங்களூரு, ராஜஸ்தான், கொல்கத்தா, மும்பை, ஐதராபாத் என்று அனைத்து மாநிலங்களிலும் தோனிக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கே ஆச்சரியம் கொடுத்தது.

அதேபோல் கடைசி ஐபிஎல் தொடர் என்பதால், தோனியும் ஃபிட்னெஸில் வேறு மாதிரி களமிறங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் மார்க் வுட், சந்தீப் சர்மா, சாம் கரண் உள்ளிட்ட நட்சத்திர பந்துவீச்சாளர்களையும் சிக்சர் விளாசி தோனி ஆச்சரியம் கொடுத்து வருகிறார். இதனால் தோனியின் பேட்டிங்கை பார்ப்பதற்கே ரசிகர்கள் மைதானத்தில் கூடி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் தோனி களமிறங்கும் போதும் தோனி.. தோனி.. என்ற கரகோஷம் விண்ணை தொட்டது.
இந்த நிலையில் எம்எஸ் தோனி புதிய சாதனை ஒன்றை படைத்து அசத்தியுள்ளார். ஏற்கனவே ஐபிஎல் வரலாற்றில் 20வது ஓவரில் மட்டும் 293 பந்துகளை விளையாடியுள்ள தோனி, இதுவரை 793 ரன்களை குவித்துள்ளார். இந்த நிலையில் கடைசி இரு ஓவரில் விளையாடி ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த முதல் ஓவர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். இது தோனி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தோனி இதுவரை ஓய்வு பற்றி வாய் திறக்காத நிலையில், சாதனைகளுக்கு மேல் சாதனைகள் படைத்து வருவதால் ரசிகர்கள் அவர் இன்னும் சில ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனிடையே சென்னை அணி அடுத்தப் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு உறுதி செய்யப்படும். இல்லையென்றால் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை வைத்த சிஎஸ்கே பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.