புனே : மகாராஷ்டிரா பிரீமியர் லீக் தொடரில் புனேரி பாபா அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், விக்கெட் கீப்பிங் செய்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்பேற்று சிறப்பாக அணியை வழிநடத்தினார். பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை என்றாலும், வீரர்களின் காயத்தையும் கடந்து சிஎஸ்கே அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். அதேபோல் தோனியை போலவே அமைதியான பண்புடன் ருதுராஜ் கெய்க்வாட் இருப்பது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஸ்பின்னர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டதே விமர்சனமாக வைக்கப்பட்டது. அதனை அடுத்தடுத்த சீசன்களில் ருதுராஜ் கெய்க்வாட் சரி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஐபிஎல் தொடரில் 500 ரன்களுக்கு மேல் விளாசினாலும், ருதுராஜ் கெய்க்வாட் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் டிஎன்பிஎல் தொடரை போலவே மகாராஷ்டிராவில் எம்பிஎல் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரில் புனேரி பாபா அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் விளையாடி வருகிறார். இன்று சத்ரபதி சம்பாஜி கிங்ஸ் அணிக்க்கு எதிரான போட்டியில் புனேரி பாபா அணி களமிறங்கியது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ளார்.
இதற்கு முன்பாக ஒருமுறை விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ளார். அப்போது ரசிகர்களிடையே பெரியளவில் விவாதமாகாத நிலையில், மீண்டும் விக்கெட் கீப்பர் கிளவுஸை ருதுராஜ் கெய்க்வாட் ஏற்றுள்ளது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட் கீப்பராக செயல்பட்டதும் பாராட்டுகளை பெற்று வருகிறது. லெக் ஸ்டம்ப் திசையில் சென்ற பந்துகளை ருதுராஜ் கெய்க்வாட் தாவிப்பிடித்தது ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இதனால் தோனியின் சிஷ்யனாகவே ருதுராஜ் கெய்க்வாட் மாறிவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.