சென்னை: ஐபிஎல் போட்டிகளில் 2 வருடங்கள் விளையாட விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் விசாரமைக்கு ஏற்றுக்கொண்டதோடு, பிசிசிஐக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2013-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் போது, சூதாட்ட குற்றச்சாட்டுகள் வெடித்தன. சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சூதாட்ட சர்ச்சையில் சில அணிகளின் நிர்வாகிகளும் சிக்கினர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளர் ராஜ்குந்தரா ஆகியோருக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு இருப்பதாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி முகுல் முட்கல் கமிட்டி சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது.
இதையடுத்து, நிர்வாகிகள் மீதும், சம்பந்தப்பட்ட ஐ.பி.எல். அணிகள் மீதும் என்ன நடவடிக்கை எடுக்கலாம், என்பதை முடிவு செய்ய சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுப்பெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் கமிட்டி அமைத்தது. இந்த கமிட்டி ஆராய்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க தலா 2 ஆண்டுகள் தடையும், குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட ஆயுட்கால தடையும் விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில், 'சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போட்டியில் கலந்து கொள்ள 2 ஆண்டு தடை விதித்து கடந்த ஜூலை 14ம் தேதி நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான குழுவின் உத்தரவை ரத்து செய்யவேண்டும். அந்த உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு ஹைகோர்ட்டில் இன்று தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், விளக்கம் கேட்டு, பிசிசிஐ, பீகார் கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது.