சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை ஐபிஎல் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கேவின் பந்து வீச்சு மிகவும் மோசமாக இருந்ததால் தற்போது ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 178 ரன்கள் என்ற இலக்கை மிக எளிதாக குஜராத் அணியை சி எஸ் கே எட்ட விட்டது.
குறிப்பாக சிஎஸ்கே அணியில் உள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினார்கள். தற்போது சிஎஸ்கே அணி திங்கட்கிழமை லக்னோ அணியுடன் தனது சொந்த மண்ணில் பல பரிட்சை நடத்துகிறது. சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டராக இடம்பெற்றுள்ள ஸ்டோக்ஸ் காயத்திலிருந்து குணமடைந்து வருவதால் அவர் பந்து வீசவில்லை.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு குறித்தும் ஸ்டோக்ஸ் எப்போது பந்துவீசுவார் என்பது குறித்தும் பயிற்சியாளர் பிளமிங் அளித்த விளக்கத்தை தற்போது பார்க்கலாம்.ஸ்டோக்ஸ் கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டிக்கும் ஐபிஎல் போட்டிக்கும் இடையே கொஞ்சம் காலம் ஓய்வு எடுத்துக் கொண்டார்.
அவரது முட்டிப் பகுதியில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வருகிறார். இன்னும் அவர் 100 சதவீதம் உடல் தகுதியை பெறவில்லை. அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்துக் கொண்டு வருகிறோம்.முழு உடல் தகுதி எட்டியவுடன் நிச்சயமாக ஸ்டோக்ஸ் பந்து வீசுவார். அது சிஎஸ்கே அணிக்கு கூடுதல் சாதகத்தை கொடுக்கும். இன்னும் நிறைய வெளிநாட்டு வீரர்கள் சிஎஸ்கே அணிக்கு வந்து சேர வேண்டியது உள்ளது.
அவர்கள் வந்தவுடன் பந்துவீச்சு பிரச்சனை தீர்ந்துவிடும். இன்று அறிமுகப்படுத்தப்பட்ட வீரர்களும் நன்றாக செயல்பட்டனர். எனவே இதை நான் மோசமாகவே கருதவில்லை என்று ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார். சிஎஸ்கே அணியில் ஏற்கனவே பிரிட்டோரியஸ் உள்ள நிலையில் தென்னாப்பிரிக்க வீரர் சிசாண்டா மங்களா, இலங்கை வீரர் பதிரத்னா, தீக்சானா ஆகியோர் இன்னும் சென்னை வந்து சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.