சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருக்கும் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சஹார் நேற்று ஒரு கருத்தை தெரிவித்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவில் அவர் ஒளிபரப்பு நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்தார்.
அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான வித்தியாசத்தை பற்றி கூறுமாறு அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரே ஒரு தலைவர் மட்டும் தான். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் பல தலைவர்கள் இருக்கிறார்கள்" என்று பதிலளித்தார்.

அதாவது சிஎஸ்கே அணியில் தோனி தான் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா, முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் மூத்த வீரர்கள் ஆன சூரியகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அணியை வழி நடத்துகிறார்கள் என்பதையே சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இதை சுட்டிக்காட்டி சிஎஸ்கே ரசிகர்கள் தீபக் சஹார் சொன்னது சரியா என விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இருக்கிறார். அவருக்கு தோனி உதவி செய்தாலும் பல முடிவுகள் ருதுராஜ் கெய்க்வாட் எடுக்கிறார். எனவே தீபக் சஹார் சொன்னதில் ருதுராஜுக்கு அங்கு வேலை இல்லை என்பது போல ஒரு அர்த்தமும் வருகிறது. அதைத்தான் ரசிகர்கள் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகின்றனர்.
இது மட்டும் இன்றி சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடருக்கு எவ்வாறு தயாராகும் என்ற ரகசியத்தையும் போட்டு உடைத்து இருக்கிறார். அது பற்றி அவர் பேசுகையில், "இரண்டு அணிகளுமே ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைப்பில்தான் இருக்கும். முதல் நாளே நாம் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்று தான் சொல்வார்கள். நான் சிஎஸ்கே உடன் இருக்கும்போது பயிற்சி நிர்வாகம் என்னை ஐபிஎல் இறுதிப்போட்டியில் இறுதி ஓவரின் பந்து வீசுவதைப் போல பயிற்சி செய்யுமாறு சொல்வார்கள். அதே போல பேட்ஸ்மேன்களும் இறுதிப் போட்டியின் இறுதி ஓவரில் பேட்டிங் செய்வதைப் போல பயிற்சி செய்ய வேண்டும் என்பார்கள். எங்களது ஒட்டுமொத்த நோக்கமும் கோப்பை வெல்ல வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்" என்றார் தீபக் சஹார்.