சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹரபஜன்சிங் உருக்கமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஆட்டம் தான் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே விளையாடும் கடைசி லீக் ஆட்டம் ஆகும்.
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பு சிஎஸ்கே அணி நிர்வாகம் போட்டி முடிந்த பிறகு ரசிகர்கள் மைதானத்தில் கொஞ்ச நேரம் இருங்கள் என கோரிக்கை விடுத்தது.இதனால் தோனி ரசிகர்களுக்கு மைதானத்தைச் சுற்றி பிரியா விடை அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து பேசிய சிஎஸ்கே அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹரபஜன்சிங், தோனி நேரத்தையே நிறுத்திவிட்டார் என்று கூறினார். இது குறித்து பேசிய அவர் தோனிக்கு கொஞ்சம் கூட வயது ஆகவில்லை. நான் பார்த்தபோது எப்படி இருந்தாரோ, எப்படி விளையாடினாரோ அப்படியே தாம் இருக்கிறார். அவருடைய பேட்டிங் ஸ்பீட் பெரிய சிக்சர்கள் எல்லாம் கொஞ்சம் கூட மாறவில்லை.
ஆனால் ரன்கள் ஓடும்போது மட்டும் அவருடைய வேகம் கொஞ்சம் குறைந்து இருக்கிறது. ஆனால் இன்னும் அவர் எளிதாக சிக்சர் அடித்துக் கொண்டுதான் இருக்கிறார். பேட்டிங்கில் இன்னும் எதிரணி வீரர்களுக்கு அபாயத்தை கொடுக்கும் வீரராக உள்ளார். என்னை கேட்டால் தோனி இன்னும் ஒரு சீசன் விளையாட வேண்டும். எங்களுடைய மனதை நொறுக்கி விடாதீர்கள் தோனி என்று அவர் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ், தோனிக்கு கீழ் விளையாடும் சீனியர்களுடைய கிரிக்கெட் வாழ்க்கை எப்படி பழைய மாதிரி மீண்டு வருகிறது என்று எனக்கு தெரியவில்லை. கேப்டனாக களத்திலும் அவர் சிறந்த முறையில் பணியாற்றுவதால் தான் சிஎஸ்கே அணியால் தொடர்ந்து வெற்றி பெற முடிகிறது என்று மித்தாலி ராஜ் பாராட்டியுள்ளார்.