கொல்கத்தா: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஷர்துல் தாகூர் 29 பந்துகளில் 68 ரன்களை விளாசி, கொல்கத்தா அணியின் வெற்றிக்கு மிகமுக்கிய காரணமாக அமைந்தார். இதன் காரணமாக ஷர்துல் தாகூரை சென்னை அணியின் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 9வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 89 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களம் புகுந்த ஷர்துல் தாகூர், ஆக்ரோஷமான ஆட்டத்தால் சிக்சர், பவுண்டரி என்று விளாசி தள்ளினார். இதனால் 20 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

கடைசி ஓவரில் சிக்சர் அடிக்க முயன்று 29 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஷர்துல் தாகூர் ஆட்டமிழந்தார். ஷர்துல் தாகூர் அடித்த ஒவ்வொரு பந்தும் கிளீன் ஹிட்டாக பவுண்டரி எல்லையை கடந்து சென்றது. இதன் காரணமாக ஆட்டநாயகன் விருதையும் வென்றார். ஷர்துல் தாகூரின் பேட்டிங்கால் கேகேஆர் வெற்றிபெற்றதால், அவருக்கு பலரும் உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் சென்னை அணி ரசிகர்கள் மட்டும் ஷர்துல் தாகூரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதற்கு 2019ஆம் ஆண்டு மும்பை அணியுடனான இறுதிப்போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்ததே காரணம். 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை அணியை வீழ்த்த சென்னை அணிக்கு கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் வாட்சன் ரன் அவுட்டாகி வெளியேற, ஆட்டத்தை முடிக்கும் வகையில் தீபக் சஹர் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் முன் தோனி ஷர்துல் தாகூரை களமிறக்கினார். கடைசி பந்தில் 2 ரன்கள் இல்லையென்றாலும், ஒரு ரன் எடுத்து டிரா செய்தால் கூட போதுமானது என்று சிஎஸ்கே ரசிகர்கள் இருந்தனர்.

ஆனால் மலிங்கா வீசிய கடைசி பந்தில் ஷர்துல் தாகூர் ஆட்டமிழந்தார். அந்த ஒரு பந்தில் சென்னை அணிக்கு ஒரு ஐபிஎல் கோப்பை மிஸ் ஆனது. இதனால் ஷர்துல் தாகூரை சிஎஸ்கே ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். அந்த தோல்வி சென்னை ரசிகர்களின் மனதில் ஆறாத வடுவாக மாறியது. இதனால் ஆர்சிபி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஷர்துல் தாகூர் அரைசதம் விளாசியதை சிஎஸ்கே ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.