மும்பை: இண்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காக சென்னை அணியின் முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் பரம எதிரிகளாக கருதப்படும் சென்னை மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளுக்காகவும் விளையாடிய வீரர்கள் சிலர் தான். அந்த வகையில் டுவைன் பிராவோ, ஹர்பஜன் சிங், அம்பாதி ராயுடு உள்ளிட்டோர் மும்பை அணியில் இருந்து வந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர்கள். அதில் அம்பாதி ராயுடு இரு அணிகளுக்குமான ஸ்பெஷலான வீரர்.

ஏனென்றால் இரு அணிகளுக்கும் பல அசாத்தியமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர். இருப்பினும் சென்னை அணிக்கு வந்தபின் ராயுடுவை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாட தொடங்கினார்கள். சென்னை அணி நிர்வாகமும் கடைசி வரை அம்பாதி ராயுடுவுக்கான மரியாதையையும், மகிழ்ச்சியையும் அளித்தது. இதன் உச்சியாக ஐபிஎல் கோப்பையையே கேப்டன் தோனி, ராயுடுவை அழைத்து சென்று வாங்கினார்.
இதன் பின் ஓய்வை அறிவித்த அம்பாதி ராயுடு சர்வதேச அளவிலான லீக் தொடர்களில் அடுத்தடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார். ஏற்கனவே கரீபியன் பிரீமியர் லீக் தொடர் மற்றும் எஸ்ஏலீக் டி20 தொடரில் ஜேஎஸ்கே அணிக்காக ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டு வரும் இண்டர்நேஷனல் லீக் டி20 தொடரிலும் விளையாட அம்பாதி ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அதிலும் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காக அம்பாதி ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 2017ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் மும்பை அணி நிர்வாகத்துடன் அம்பாதி ராயுடு கைகோர்த்துள்ளார். அந்த அணியில் பொல்லார்ட், டுவைன் பிராவோ உள்ளிட்டோர் ஏற்கனவே இருக்கிறார்கள்.
தற்போது அம்பாதி ராயுடுவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், அதுவொரு சிஎஸ்கே - மும்பை ரீயூனியன் போல் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மும்பை அணிக்காக ஆடிய கோரே ஆண்டர்சனும் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் இன்ரட்நேஷனல் லீக் டி20 தொடர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.