CSK: குஜராத்திடம் தோற்ற சிஎஸ்கே-வால் இனி பிளே ஆஃப் செல்ல முடியுமா? புள்ளிப்பட்டியல் கணக்கு இதுதான்
சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் அடைந்த படுதோல்விக்கு பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் கனவு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள சிஎஸ்கே, இனி வரும் போட்டிகளில் எத்தனை வெற்றிகள் பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற முழுமையான அலசலை இங்கே பார்ப்போம்.
2026 ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் பந்தயம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. தோல்வியே சந்திக்காத பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் கம்பீரமாக வலம் வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தலா 10 புள்ளிகளுடன் முறையே முதல் 4 இடங்களை பிடித்துள்ளன. சிஎஸ்கே அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஆனால், சொந்த மண்ணில் படுதோல்வி அடைந்த சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்விகளுடன் வெறும் 6 புள்ளிகளை மட்டுமே பெற்று 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணியும் 6 புள்ளிகளுடன் 7வது இடத்தில் சிஎஸ்கே அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது.
பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தவித சிக்கலும் இன்றி தகுதி பெற ஒரு அணி குறைந்தபட்சம் 16 புள்ளிகளைப் பெற வேண்டும். ஐபிஎல் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் விளையாடும். அந்த வகையில் சிஎஸ்கே அணிக்கு இன்னும் 6 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. இதில் அந்த அணி குறைந்தபட்சம் 5 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அப்படி 5 போட்டிகளில் வென்றால் சிஎஸ்கே அணியின் புள்ளி 16 ஆக உயரும், இதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம்.
ஒருவேளை மீதமுள்ள 6 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றால், 14 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும். அப்போது மற்ற அணிகளின் வெற்றி தோல்வி முடிவுகள் மற்றும் நெட் ரன் ரேட் அடிப்படையில் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு அமையும். சிஎஸ்கே அணியின் நெட் ரன் ரேட் சமீபத்திய தோல்விக்கு பிறகு -0.121 ஆக சரிந்துள்ளது. இது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இனி வரும் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளை சிஎஸ்கே எதிர்கொள்ள உள்ளது. இனி சிஎஸ்கே விளையாடும் ஒவ்வொரு போட்டியும் நாக் அவுட் போட்டி போன்ற வாழ்வா சாவா போராட்டம் தான். அதிலும் நெட் ரன் ரேட்டை கணிசமாக உயர்த்த பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. தொடர் சறுக்கல்களை சந்தித்து வரும் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணி, தவறுகளை திருத்திக்கொண்டு இனி விஸ்வரூபம் எடுத்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா? என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
