மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் தோனி ஒவ்வொரு போட்டியிலும் கூடுதல் ஓவர்கள் பேட்டிங் செய்ய வேண்டும் என ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அது நடக்காது என முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறி இருக்கிறார்.
2024 ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெற இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 2008 முதல் செயல்பட்டு வந்த தோனி, 2024 ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட் வசம் ஒப்படைத்து இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு மைதானத்தில் நடக்கும் போட்டியையும் காண வரும் ரசிகர்களும் தோனியின் பேட்டிங்கை நேரில் பார்த்து விட வேண்டும் என ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும், தோனியின் பேட்டின்கை பார்த்து விட வேண்டும் என்பதற்காகவே தொலைக்காட்சி மற்றும் இணையம் வழியாக சிஎஸ்கே போட்டியை காண்போர் எண்ணிகையும் அதிகமாக உள்ளது.
தோனி தற்போது கடைசி இரண்டு அல்லது மூன்று ஓவர்களில் மட்டுமே பேட்டிங் இறங்கி ஆடி வருகிறார். 2024 ஐபிஎல் தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் மட்டுமே பேட்டிங் செய்துள்ள அவர் அதில் ஒரு போட்டியில் மட்டுமே மூன்று ஓவர்களுக்கும் அதிகமாக களத்தில் நின்றார். அந்தப் போட்டியில் சிக்ஸ், ஃபோர் என பட்டாசாய் அதிரடி ஆட்டம் ஆடி 37 ரன்கள் சேர்த்தார். ஆனால், அதன் பின் இரு போட்டிகளில் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி நீண்ட நேரம் பேட்டிங் செய்வாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த இர்பான் பதான், "நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், அவர் 42 வயதான தோனி. அவர் இளமையாக இருக்கிறார் என நாம் சொல்லலாம். ஆனால், அவர் தன்னை இளமையாக மேம்படுத்திக் கொண்டு இருக்கிறார். அவர் முன்பு 10 அல்லது 11வது ஓவரில் வந்து பந்தை டிரைவ் செய்து, பின்னர் போட்டியை முடித்து வைப்பார். ஆனால், இப்போது அவர் தன்னை தானே சுருக்கிக் கொண்டு சிறிய பணியை மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார். கடைசி இரண்டு அல்லது மூன்று ஓவர்களில் மட்டுமே களமிறங்கி பெரிய ஷாட்களை ஆடுகிறார். எனவே, அவர் நீண்ட நேரம் பேட்டிங் ஆடுவது நடக்காது என்றே கருதுகிறேன். ஆனால், அது நடந்தால் அது எல்லோருக்கும் நன்றாக இருக்கும்." என்றார்.