சென்னை: சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோருக்கு ஒரு நியாயம், தோனிக்கு ஒரு நியாயமா? என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கிறார் 43 வயதான தோனி.
அவர் அதிக நேரம் பேட்டிங் செய்ய முடியாது என்பதால் ஒவ்வொரு போட்டியிலும் நான்கு ஓவர்கள் மீதமிருக்கும் போது மட்டுமே களம் இறங்க விரும்புகிறார். சிஎஸ்கே அணி எந்த சூழ்நிலையில் இருந்தாலும் அவர் பின்வரிசையில் களம் இறங்கி வருவது விமர்சனத்தை சந்தித்த நிலையில், அதற்கு சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் அது குறித்து விளக்கம் அளித்து இருந்தார்.

அப்போது முழங்கால் பிரச்சனை காரணமாக தோனியால் ஒன்பது அல்லது பத்து ஓவர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியாது எனவும், அணியின் சூழ்நிலைக்கேற்ப அவரது பேட்டிங் வரிசையை அவரே முடிவு செய்து கொள்கிறார் என்றும் கூறியிருந்தார். இத்தனைக்கும் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், பயிற்சியாளரான தன்னையும் தாண்டி தோனி தனது பேட்டிங் வரிசையை தானே முடிவு செய்து கொள்வார் என்றும் சொல்லியிருந்தார் ஸ்டீபன் பிளம்மிங்.
மேலும் தோனியின் உடல் தகுதி முன்பை விட ஓரளவு முன்னேறி இருந்தாலும் அவரால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாது என்றும் சொல்லியிருந்தார். இந்த விளக்கம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் பொங்கி எழ வைத்துள்ளது. அவர்கள் 2012 கால கட்டத்தில் நடந்த ஒரு விஷயத்தை சுட்டிக் காட்டி விளாசி வருகின்றனர்.
2011 உலக கோப்பைக்கு பிறகு சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக் மற்றும் கௌதம் கம்பீர் ஆகிய மூவரில் இருவருக்கு தான் பிளேயிங் லெவனில் இடம் அளிக்க முடியும், ஏனெனில், அவர்கள் மெதுவாக ஃபீல்டிங் செய்கிறார்கள், வயதாகிவிட்டது என அவர்களுக்கு இடையே சுழற்சி முறையை அமல்படுத்தியிருந்தார் அப்போதைய கேப்டன் தோனி.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்த சர்ச்சுக்குரிய சம்பவம் நடந்தது. அதே போல இப்போது, 28 வயது கேப்டன் தோனி தற்போது சிஎஸ்கே அணியில் இருக்கும் 43 வயது தோனியை தனது அணியில் சேர்த்துக் கொள்வாரா? 43 வயது தோனியை பிளேயிங் லெவனில் ஒரு இந்திய அணி கேப்டனாக தோனி அணியில் சேர்ப்பாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அன்று சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக் போன்ற ஜாம்பவான் வீரர்களுக்கு ஒரு நியாயத்தை சொன்ன தோனி, இன்று சிஎஸ்கேவில் தனது விருப்பப்படி முழு உடல் தகுதி இல்லாமல் விளையாடலாமா? அதனால் அணிக்கு பாதிப்பு ஏற்படுத்தலாமா என கேள்வி எழுப்பி உள்ளனர்.
மற்றொரு ரசிகரோ, "90களில் இருந்து கிரிக்கெட் ரசிகராக இருக்கிறேன். 2011ஆம் ஆண்டு தோனி ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வென்று கொடுத்தது முதல் அவர் மீது மிகப்பெரிய மரியாதையை வைத்து இருக்கிறேன். ஆனால், உங்களது அணி ஒரு ஓவருக்கு 14 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் அஸ்வினை பேட்டிங் செய்ய வைத்து, முன்னே வராமல் நீங்கள் பின்னே வந்து பேட்டிங் செய்யும்போது எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் நீங்கள் உடனடியாக ஓய்வு பெறலாம், மற்றொருவருக்கு உங்களது இடத்தை அளிக்கலாம் என்று தோன்றியது" என்று கூறியிருக்கிறார். இதுபோல சமூக வலைத்தளங்களில் தோனிக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகின்றன.