அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியின் ஜாம்பவானாக கருதப்படும் அம்பத்தி ராயுடு இன்றுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 38 வயதான அம்பத்தி ராயுடு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2010 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.
அதன்பிறகு 2018 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு வந்து ரசிகர்களின் அன்பை பெற்றார். சுமார் 203 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4329 ரன்களை அம்பத்தி ராயுடு விளாசி இருக்கிறார்.

இதில் ஒரு சதம் அடங்கும். 22 அரை சதம் அடங்கும். அம்பத்தி ராயுடு, கபில்தேவ் நடத்திய கிரிக்கெட் தொடரில் பங்கேற்று பிசிசிஐ இடம் தடை வாங்கி இருந்தார். அதன் பிறகு பிசிசிஐ யிடம் பொதுமனிப்பு பெற்று, ஐபிஎல் தொடரில் பங்கேற்றார். தனது ஓய்வு முடிவு குறித்து அறிவித்த அம்பத்தி ராயூடு, மும்பை சிஎஸ்கே என இரண்டு மிகப்பெரிய அணிகள், 204 போட்டிகள், 14 சீசன்ங்கள்,11 பிளே ஆப், 8 இறுதிப் போட்டி, ஐந்து கோப்பை ,ஆறாவது கோப்பை இன்று வெல்வேன் என நம்புகிறேன்.
இது என் வாழ்நாளில் மறக்க முடியாத பயணம். இன்று இரவு நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டி உடன் நான் ஓய்வு பெற போகிறேன். இந்த தொடரில் விளையாடியதை மிகவும் மகிழ்ச்சியாக கருதுகிறேன். அனைவருக்கும் நன்றி. இந்த ஓய்வு முடிவில் இருந்து திரும்பப் போவதில்லை என்றும், ராயூடு கூறியிருக்கிறார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு ராயுடு ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் அதனை ஏற்கவில்லை. இதனை அடுத்து தனது ஓய்வு முடிவில் இருந்து ராயுடு பின் வாங்கினார். 2018 ஆம் ஆண்டு சிஎஸ்கே கோப்பையை வெல்ல அம்பத்தி ராயுடு முக்கிய காரணமாக அமைந்தார். அந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடி 602 ரன்கள் அவர் குவித்தார்.
இதில் ஸ்டிரைக் ரேட் 149.75 ஆகும். இதேபோன்று 2021 ஆம் ஆண்டு 16 போட்டிகளில் விளையாடி 257 ரன்கள் குவித்த ராயூடு, ஸ்ட்ரைக் ரைட்டை 151 என்ற அளவில் வைத்திருந்தார். நடப்பு சீசனில் 15 போட்டிகளில் விளையாடிய ராயுடு 139 ரன்கள் தான் அடித்திருக்கிறார். 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ராயுடுவை தேர்வு குழு சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் நீக்கப்பட்டார். இதனால் ராயுடு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகினார். ராயுடு இன்று கோப்பையுடன் வீடு திரும்ப வேண்டும் என்பது சிஎஸ்கே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.