லண்டன்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், சனிக்கிழமையன்று துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட வாய்ப்புள்ளதாக சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி நிர்வாகிகளிடையே பரவிய கொரோனா தொற்று காரணமாக, இன்று (செப்.10) நடைபெறவிருந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தொடங்கவிருந்த இந்த டெஸ்ட் போட்டி, கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

இது குறித்து முதலில் அறிக்கை வெளியிட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், "5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுகிறது. இது ரசிகர்களுக்கு மிகப் பெரும் ஏமாற்றம் இருக்கும் என்பதை அறிகிறோம். இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்; என்று குறிப்பிட்டிருந்தது. இதன் பிறகு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அறிக்கையில், "இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (இசிபி) இணைந்து மான்செஸ்டரில் நடைபெறவுள்ள 5 வது டெஸ்ட் போட்டியை நிறுத்த முடிவு செய்துள்ளது. BCCI மற்றும் ECB இந்த கடைசி டெஸ்ட் போட்டியை எப்படியாவது நடத்த பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இருப்பினும், இந்திய அணி நிர்வாகத்தில் கோவிட் -19 பரவுவதால், இந்த டெஸ்ட் போட்டியை நிறுத்தும் முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம். பிசிசிஐ மற்றும் இசிபி இடையே உள்ள வலுவான உறவின் காரணமாக, ரத்து செய்யப்பட்ட டெஸ்ட் போட்டியை வேறு தேதியில் நடத்த இங்கிலாந்து வாரியத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரியங்களும் இந்த டெஸ்ட் போட்டியை மீண்டும் நடத்த ஒரு சரியான நேரத்தை கண்டறியும்" என்று கூறியுள்ளார்.
அது எந்த நேரம் என்பதில் எந்த தெளிவும் இதுவரை ஏற்படவில்லை. காரணம், அடுத்து ஐபிஎல் தொடர், அதன் பிறகு உலகக் கோப்பை டி20 தொடர், பிறகு ஆஷஸ் தொடர் என்று இரண்டு அணிகளும் அடுத்தடுத்து கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளன. அடுத்த ஆண்டு மிடில் வரை பிஸி ஷெட்யூல் இருக்கிறது. எனவே, எப்போது இந்த மீதமுள்ள ஒரு டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் விளையாடும் என்று தெரியவில்லை. இதனால், இந்த டெஸ்ட் போட்டியின் முடிவு என்ன என்பதும் தெரியவில்லை. இந்திய அணி 2-1 என்று முன்னிலையில் இருந்தும், இத்தொடர் கானல் நீராகிவிட்டது.

இதுபுறமிருக்க, கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட, ஐபிஎல் அணிகளோ இப்போது துரிதமாக தங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இதில் முதல்கட்டமாக, இங்கிலாந்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், சனிக்கிழமை அன்று மான்செஸ்டரில் இருந்து துபாய் அழைத்துச் செல்லப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஏஎன்ஐ-யிடம் பேசுகையில், "இப்போது டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்துவிட்டது. இதனால், நாளை (செப்.11) இங்கிலாந்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை துபாய்க்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளோம்" என்று கூறியுள்ளார்.
அதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களான ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், புஜாரா ஆகியோர் நாளை துபாய் அழைத்துச் செல்லப்படுவார்கள் என தெரிகிறது. பிறகு அங்கு 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பிறகு தோனி உட்பட மற்ற வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. வரும் செப்.19ம் தேதி அமீரகத்தில் தொடங்கும் இரண்டாம் கட்ட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.