சிஎஸ்கே நிர்வாகம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக உயிரை கொடுத்து விளையாடி பல வெற்றிகளை பெற்று தந்த ரெய்னாவை, கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் தேர்வு செய்யவில்லை. இதுவே ரசிகர்கள் மனதில் இருந்து இன்னும் நீங்காத நிலையில், தற்போது அந்த வரிசையில் ஜடேஜா இணைந்துள்ளார்.
தொடர் தோல்வி
சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய ஜடேஜா , அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனை அவர் கேட்டு வாங்கினாரா, இல்லை அணி நிர்வாகமே கொடுத்ததா என்பது அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம். ஆனால், ஜடேஜா கேப்டன் ஆனதும் சிஎஸ்கே அணி தொடர் தோல்வியை தழுவியது.
கேப்டன்சி சிக்கல்
அதற்கு காரணம், ஜடேஜாவுக்கு முழு சுதந்திரத்தை கொடுக்காமல் தோனி பொம்மை கேப்டனாக நடத்தியதாக செய்திகள் வெளியானது. ஒரு கட்டத்தில் கேப்டன் பொறுப்பிலிருந்து ஜடேஜா ராஜினாமா செய்தார். இதனையடுத்து, ஜடேஜாவின் கேப்டன்சி திறமை குறித்து தோனி வெளிப்படையாக பேட்டி அளித்தார். இதனால் ஜடேஜா கேப்டனுக்கு தகுதியான ஆள் இல்லை என்பது போன்ற பிம்பம் உருவானது.
சிஎஸ்கே விளக்கம்
இதனால் ஜடேஜாவுக்கும், தோனிக்கும் விரிசல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாயின. அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற தோனியின் பிறந்தநாள் விழாவில் கூட ஜடேஜா பங்கேற்கவில்லை. இந்த நிலையில் தான், சிஎஸ்கே குறித்த பதிவுகளை ஜடேஜா சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கினார். தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ள சிஎஸ்கே நிர்வாகம், தங்களுக்கும், ஜடேஜாவுக்கும் இடையே எவ்வித விரிசலும் இல்லை. ஜடேஜா தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக தான் விளையாடுவார் என்று விளக்கம் அளித்துள்ளது.