CSK: சிஎஸ்கே வீரர் செய்த நெகிழ்ச்சி செயல்.. தாயார் இறந்து 2 நாட்களே ஆனாலும் ஆட வந்த முகேஷ் சவுத்ரி
மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் தோனி மற்றும் ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்கள் விளையாடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி எடுத்த ஒரு அதிரடி முடிவு மைதானத்தில் இருந்த அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. தனது தாயார் மறைந்த 2 நாட்களில், அந்தத் துயரத்தையும் தாண்டி அணி வீரர்களுக்காக அவர் களமிறங்கியுள்ள சம்பவம் தற்போது பேசுபொருளாகி உள்ளது.
சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமான முகேஷ் சவுத்ரியின் தாய் பிரேம் தேவி, கடந்த 1 வருடமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். மும்பையில் உள்ள டாடா மெமோரியல் மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 21 செவ்வாய்க்கிழமை அன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்தச் செய்தி கேட்டதும் நிலைகுலைந்து போன முகேஷ் சவுத்ரி, ராஜஸ்தானில் உள்ள தனது சொந்த ஊரான பில்வாராவிற்கு விரைந்தார். அங்குத் தனது தாயாரின் இறுதிச் சடங்குகளைத் தனது அண்ணன் ராஜேஷ் சவுத்ரியுடன் இணைந்து நேற்று முடித்தார். தாயை இழந்த துக்கத்தில் இருக்கும் ஒரு வீரர், அடுத்த 2 நாட்களில் நடக்கும் போட்டியில் பங்கேற்பது என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே கருதப்பட்டது.
ஆனால், சிஎஸ்கே அணி ஏற்கனவே பல வீரர்களின் காயத்தால் தவித்து வருவதையும், இன்றைய மும்பைக்கு எதிரான போட்டியின் முக்கியத்துவத்தையும் உணர்ந்த முகேஷ் சவுத்ரி, தனது தனிப்பட்ட சோகத்தை ஓரம் கட்டிவிட்டு மீண்டும் அணியுடன் இணைந்துள்ளார். இன்று அறிவிக்கப்பட்ட 'பிளேயிங் 11' பட்டியலில் முகேஷ் சவுத்ரி இடம்பெற்றதைக் கண்ட ரசிகர்கள், அவரது கடமை உணர்வைப் பாராட்டி வருகின்றனர்.
இதற்கு முந்தைய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், முகேஷ் சவுத்ரி அபாரமாகப் பந்துவீசி 21 ரன்கள் மட்டுமே கொடுத்து டிராவிஸ் ஹெட் மற்றும் இஷான் கிஷன் ஆகிய 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அந்தப் போட்டியில் விளையாடும் போதே தனது தாயாரின் கவலைக்கிடமான நிலை தெரிந்திருந்தும், அவர் சிறப்பாகச் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே நிர்வாகமும், "இந்த இக்கட்டான நேரத்தில் முகேஷ் சவுத்ரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். சிஎஸ்கே குடும்பம் எப்போதும் அவருக்குத் துணையாக இருக்கும்" என உருக்கமாகத் தெரிவித்திருந்தது.
வான்கடே மைதானத்தில் மும்பை அணிக்கு எதிரான இந்தப் போட்டியில், உணர்வுப்பூர்வமான ஒரு போராட்டத்தை முகேஷ் சவுத்ரி முன்னெடுத்துள்ளார். சிஎஸ்கே அணியின் வெற்றிக்குத் தனது பந்துவீச்சு அவசியம் என்பதை உணர்ந்து அவர் எடுத்துள்ள இந்த முடிவு, 'கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது ஒரு குடும்பம்' என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. தாயை இழந்த வலியில் இருந்தாலும், சிஎஸ்கே அணிக்காக அவர் வீசும் ஒவ்வொரு பந்தும் ரசிகர்களின் கைத்தட்டல்களையும், மரியாதையையும் பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications