டெல்லி: சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் 36 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். கடந்த சில போட்டிகளாக 30 ரன்களுக்கும் மேல் சேர்த்த பின் ஆட்டமிழந்த அவர், ஒரு வழியாக அரைசதத்தை கடந்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

டெல்லி மைதானம் முதலில் பேட்டிங் செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், தோனியின் முடிவு சரியானதாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல் டெல்லி அணி தரப்பில் இஷாந்த் சர்மா நீக்கப்பட்டு, சக்காரியா சேர்க்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சென்னை அணி சார்பாக கெய்க்வாட் - கான்வே கூட்டணி களமிறங்கியது. 2வது ஓவரிலேயே அதிரடியாக ருதுராஜ் ஒரு பவுண்டரியையும், கான்வே ஒரு சிக்சரையும் விளாச, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஒவ்வொரு ஓவருக்கும் 2 பவுண்டரிகளை கண்டிப்புடன் சென்னை அணியின் இரு பேட்ஸ்மேன்கள் விளாச தொடங்கினர். நார்கியே, அக்சர் படேல் என்று நட்சத்திர பந்துவீச்சாளர்கள் கூட இருவரின் தாக்குதலில் இருந்து தப்ப முடியவில்லை. இதனால் 6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 52 ரன்கள் குவித்தது. இதையடுத்து டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் இருவரும் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டனர்.
சிறிது நேரம் அமைதி காத்த ருதுராஜ், அக்சர் படேல் பந்துவீச்சில் அடுத்தடுத்து இரு சிக்சர்களை விளாசி 36 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். இது நடப்பு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் அடிக்கும் 3வது அரைசதமாகும். கடந்த சில போட்டிகளாக 30 ரன்களுக்கு மேல் சேர்த்தபின் அதிரடியாக ஆட முயற்சித்து ஆட்டமிழந்து வந்த ருதுராஜ், முக்கியமான போட்டியில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.