டெல்லி: நடப்பு ஐபிஎல் தொடரில் 6 அரைசதங்கள் விளாசியுள்ள சென்னை அணியின் தொடக்க வீரர் கான்வே, இதுவரை 585 ரன்களை குவித்து மிரட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும். இந்த நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கான்வே 87 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 79 ரன்களையும் விளாசினர். நடப்பு ஐபிஎல் தொடரில் டேவன் கான்வே தவறவிடும் 2வது சதம் இதுவாகும். ஏற்கனவே ஒருமுறை 92 ரன்களை வரை வந்து சதத்தை தவறவிட்டார். அதேபோல் நடப்பு ஐபிஎல் சீசனில் கான்வே அடித்துள்ள 6வது அரைசதம் இது.
எந்த நேரத்தில் அட்டாக்கை தொடங்க வேண்டும், யாரை அட்டாக் செய்ய வேண்டும் என்ற தெளிவுடன் கான்வே விளையாடி வருகிறார். இந்த சீசனில் 13 இன்னிங்ஸ்களில் விளையாடி 585 ரன்களை கான்வே குவித்து அசத்தியுள்ளார். ஒவ்வொரு முறை ஆர்சிபி அணியின் டூ பிளஸிஸ் அதிக ரன்கள் விளாசும் போதும், சென்னை அணி அவரை தவறவிட்டுவிட்டதாக மற்ற அணிகளின் ரசிகர்களும், சில சிஎஸ்கே ரசிகர்களும் புலம்பி வருகிறார்கள்.

ஆனால் சென்னை அணி நிர்வாகம் டூ பிளஸிஸ்-க்கு மாற்றாக அவரது பாணியில் ஆடும் கான்வே களமிறக்கி அசத்தியுள்ளது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் கான்வேயின் ஆட்டம், சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஹசியை பலருக்கும் நினைவூட்டி வருகிறது. அதுமட்டுமல்லாமல் கான்வே, சென்னை அணிக்கு நீண்ட காலத்திற்கான வீரராக இருப்பதால், சிஎஸ்கே டூ பிளஸிஸை தவறவிட்டதில் எந்த தவறும் இல்லை என்றே பார்க்கப்படுகிறது.