அகமதாபாத்: சென்னை அணி தரப்பில் இம்பேக்ட் பிளேயராக வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே கொண்டு வரப்பட்டுள்ளார். அதேபோல் குஜராத் அணி தரப்பில் காயமடைந்த வில்லியம்சனுக்கு பதிலாக சாய் சுதர்சன் களமிறக்கப்பட்டுள்ளார்.
16வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து இம்பேக்ட் பிளேயர் விதியை பயன்படுத்தி சென்னை அணி தரப்பில் ராயுடு வெளியில் அமர வைக்கப்பட்டார்.
ராயுடுவுக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே இம்பேக்ட் பிளேயராக கொண்டு வரப்பட்டுள்ளார். இதன் மூலம் தீபக் சஹர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஆகியோருடன் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக செயல்படவுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி மூலம் கொண்டு வரப்பட்டுள்ள முதல் வீரர் என்ற பெருமையை துஷார் தேஷ்பாண்டே பெற்றுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு கேப்டனும் டாஸின் போது இரு அணிகளை நடுவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதில் பிளேயிங் லெவன் மற்றும் இம்பேக்ட் பிளேயர் யார் யார் என்பதையும் தெரிவிக்க வேண்டும். இந்தப் போட்டியில் இம்பேக்ட் பிளேயராக சென்னை அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே, ரஹானே, நிஷாந்த், சேனாபதி உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் சென்னை அணிக்கு இரு வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருந்ததால், ராயுடுவை பெஞ்சில் அமர வைக்கப்பட்டு துஷார் தேஷ்பாண்டே அழைத்து வரப்பட்டுள்ளார். அதேபோல் முதல் இன்னிங்ஸின் போது காயம் காரணமாக வெளியேறிய குஜராத் அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை. இவருக்கு பதிலாக இம்பேக்ட் பிளேயராக சாய் சுதர்சன் களமிறக்கப்பட்டுள்ளார். இதனால் ஆட்டத்தில் சுவாரஸ்யம் அதிகரித்துள்ளது.