சென்னை சூப்பர் கிங்ஸுக்கு கிடைக்கப் போவது யார்?
சென்னை: ஐபிஎல் போட்டியில் மீண்டும் களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்றைய ஏலத்தில் கிடைக்கப் போவது யார் யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் 11வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களமிறங்குகின்றன. அதையடுத்து எட்டு அணிகளுக்கும் புதிதாக வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதில், சில வீரர்களை அணிகள் தக்க வைத்துள்ளன. மீதமுள்ளவர்களுக்கான ஏலம் இன்றும், நாளையும் பெங்களூரில் நடக்க உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே, கேப்டன் கூல் டோணி ரூ.15 கோடி, சுரேஷ் ரெய்னா ரூ.11 கோடி, ரவீந்திர ஜடேஜா ரூ.7 கோடிக்கு தக்க வைத்துள்ளது. மொத்த பட்ஜெட்டில், ரூ.33 கோடி செலவழிக்கப்பட்டதால், ரூ.47 கோடி ரூபாய் மட்டுமே உள்ளது.
மேலும் இரண்டு வீரர்களை தக்க வைக்கும் உரிமை உள்ளது. அதன்படி இரண்டு வெளிநாட்டு வீரர்கள், இரண்டு இந்தியாவுக்காக விளையாடாத உள்ளூர் வீரர்களை தேர்வு செய்யலாம்.
தற்போதைக்கு பல வெளிநாட்டு வீரர்கள் இருப்பதால், டாய்னே பிராவோ மற்றும் ஆன்ட்ரூ டை ஆகிய இருவரையும் தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.
கடந்தாண்டு குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடிய டை, 6 போட்டிகளில் ஒரு ஹாட்ரிக் உள்பட, 12 விக்கெட்களை வீழ்த்தினார். அதனால், பிரென்டன் மெக்கல்லம், சாமுவேல் பாட்ரி, டுபிளாசி, மைக்கேல் ஹசி, கைல் அபோட், டாய்னே ஸ்மித் ஆகியோரைவிட வீரர்களை தக்க வைக்கும் உரிமையில் பிராவோ மற்றும் ஆன்ட்ரூ டைக்கே அதிக வாய்ப்பு உள்ளது.
உள்ளூர் நாயகனாக ரவிச்சந்திரன் அஸ்வின் கண்டிப்பாக அணியில் இருப்பார் என்று கேப்டன் டோணி உறுதியாக கூறியுள்ளார். அதனால், ஏலத்தில் அஸ்வினுக்கு கடும் போட்டி இருக்கும்,
மும்பை இந்தியன்ஸ்
ரோஹித் சர்மா, ஹார்திக் பாண்டயா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 2 உள்நாட்டு வீரர்களில் மீதமுள்ள இருவரை தேர்வு செய்யலாம். பட்ஜெட், ரூ. 47.5 கோடி உள்ளதால், கிரான் போலர்டு மற்றும் குருனால் பாண்டயா தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்களில் சிறப்பாக செயல்படும் ஜாஸ் பட்லரும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு பட்லர் தேர்வானால், குருனால் பாண்டயாவை மும்பை இந்தியன்ஸ் தக்க வைக்காது. அவரை ஏலத்தில் எடுக்க முயற்சிக்கும்.
கோல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஆன்ட்ரே ரசல் மற்றும் சுனில் நரேன் ஆகிய இரண்டு வெளிநாட்டு வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். ரூ, 59 கோடி பட்ஜெட் உள்ளது. கேப்டனாக இருந்த கவுதம் கம்பீர், குல்தீப் யாதவ், மனீஷ் பாண்டே ஆகியோர் ஏலத்தில் தக்க வைக்கப்படுவர் என்று எதிர்பார்க்கலாம்.
சீனியர் பிளேயரான ராபின் உத்தப்பா ஏலத்தில் எடுக்கப்படலாம்.
சன் ரைசர்ஸ் ஐதராபாத்
டேவிட் வார்னர் மற்றும் புவனேஸ்வர் குமார் தக்க வைக்கப்பட்டுள்ளனர். ரூ.67.5 கோடி பட்ஜெட்டுடன் ஏலத்தில் கலந்து கொள்கிறது. ரஷீத் கான், ஷிகார் தவான், யுவராஜ் சிங் ஏலத்தில் தக்க வைக்கப்படலாம்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
அக்சார் படேலை மட்டும் தக்க வைத்துள்ள அணியிடம், ரூ.67.5 கோடி பட்ஜெட் உள்ளது. மேலும் மூன்று பேரை மட்டுமே தேர்வு செய்யலாம் என்ற நிலையில், ஹசிம் ஆம்லா, டேவிட் மில்லர், சந்தீப் சர்மா ஆகியோர் தக்க வைக்கப்படலாம். கிளென் மேக்ஸ்வெல்லுக்கும் வாய்ப்பு உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
ஸ்டீவ் ஸ்மித்தை தக்க வைத்துள்ளது. மேலும் மூன்று பேரை மட்டுமே ஏலத்தில் தக்க வைக்க முடியும். ரூ. 67.5 கோடி பாக்கி உள்ளது. அஜிங்யா ரஹானே, தாவல் குல்கர்னி, ஜேம்ஸ் பால்க்னர் ஆகியோர் ஏலத்தில் தக்க வைக்க அதிக வாய்ப்பு உள்ளது. ரஞ்சியில் கலக்கிய விதர்பா பந்துவீச்சாளர் ரஜ்னீஸ் குர்பானிக்கும் வாய்ப்பு உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
விராட் கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸ் தக்க வைக்கப்பட்டுள்ளனர். ரூ.49 கோடி பட்ஜெட் உள்ளது. கிறிஸ் கெயில், யுஸ்வேந்திர சாஹல், கேதார் ஜாதவ் ஆகியோருக்கு அதிக வாய்ப்பு உள்ளது,
டெல்லி டேர்டெவில்ஸ்
ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர். குயின்டன் டிகாக், சஞ்சு சாம்சன் ஆகியோர் தக்க வைக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications