
தோனியே காரணம்
ஐபிஎல் 2021 தொடர், கிளைமேக்ஸ் நெருங்கிவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் முன்னேறிவிட்ட நிலையில், நான்காவது இடத்துக்கு மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் இடையே கடும் மோதல் நிலவுகிறது. நடப்பு சாம்பியனான மும்பை, பிளே ஆஃப் நுழைவதற்கு படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதேசமயம், கடந்த 2020 சீசனில், தொடரை விட்டு வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் இத்தொடரில் கம்பீரமாக முதல் அணியாக பிளே நுழைந்து அதகளம் புரிந்தது. இந்த எழுச்சிக்கு மிக முக்கிய காரணம் மகேந்திர சிங் தோனி.

சீக்ரெட் தவிர்த்த தோனி
ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 சீசன் முதல், இந்த சீசன் வரை, தோனி தலைமையிலான சென்னை அணி பிளே ஆஃப் நுழைய முடியாமல் வெளியேறிய ஒரே சீசன் என்றால் அது 2020 சீசன் தான். ஐபிஎல் தொடரில் மும்பை அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்தாலும், சென்னை தான் கன்சிஸ்டன்சி உள்ள அணி. ஒவ்வொரு முறையும் அணியை பிளே ஆஃப் அழைத்துச் செல்லும் சீக்ரெட்டை தோனியிடம் வெளிப்படையாகவே கேட்டும், அதற்கு அவர் 'சீக்ரெட் என்றால் அதை வெளியே சொல்லக் கூடாது" என்று டிரேட் மார்ட் சிரிப்பில் தவிர்த்துவிட்டார்.

கிரிக்கெட் டச் இல்லை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு கேப்டனாகவும், ஒரு பேட்ஸ்மேனாகவும் தோனி அளித்த பங்குக்கு ஈடு இணையே சத்தியமாக கிடையாது. அவர் குறைந்தது 5 போட்டிகளிலாவது வென்றுக் கொடுக்காத சீசன் இருக்க முடியாது. 2018ல் கடைசியாக சிஎஸ்கே கோப்பையை வென்ற தொடர் வரைக்கும், சென்னை அணியை கடைசி வரை பேட்டிங்கில் கரைசேர்த்தவர் இந்த 'பேட்ஸ்மேன் தோனி'. இந்த 2019 கூட ஓகே தான். ஆனால், 2020 மற்றும் நடப்பு 2021 சீசனில் தோனி முற்றிலுமாக... அதாவது 100 சதவிகிதம் தனது பேட்டிங் திறமையை மறந்தேவிட்டார். அதாவது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த ஆண்டு 2020ம் ஆண்டு அவர் ஓய்வு அறிவித்ததில் இருந்து, அவரால் ஒரு ஐபிஎல் போட்டியில் கூட தனது பழைய ஆக்ரோஷத்தை காட்ட முடியவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாததால் தான் 360 டிகிரி வீரர் என்று அழைக்கப்படும் டி வில்லியர்ஸ் கூட "கிரிக்கெட் டச்" இல்லாமல் தடுமாறி வருகிறார். இப்போது தோனி சந்திக்கும் சிக்கலும் அதே தான்.

அடப்பாவத்த
வருடத்தின் அனைத்து நாட்களில் கிரிக்கெட்டே விளையாடாமல், நேராக வந்து ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுவதால் தான், அவரால் பேட்டிங்கில் பழைய ஃபார்மை வெளிக்கொண்டு வர முடியவில்லை. குறிப்பாக, நேற்று டெல்லிக்கு எதிராக ஒரு பந்தை கூட பவுண்டரிக்கு அடிக்க முடியாமல் அவுட்டாகி வெளியேறிய போது, எப்போதும் அவரை கலாய்க்கும் ரசிகர்கள் கூட, 'அடப்பாவத்த' என்று வருத்தப்பட்டிருப்பார்கள். அவர் திணறுவதை பார்க்க அவ்வளவு வேதனையாக இருந்தது. அவர் ஃபார்மில் உச்சத்தில் இருந்த காலத்திலேயே வந்தவுடன் அடிக்க மாட்டார். கடைசி 3 அல்லது 2 ஓவர் தான் அடிப்பார். இதில், நேற்று டெல்லிக்கு எதிராக அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய, ஜடேஜா, சாம் கர்ரன், பிராவோவுக்கு முன்பாக களமிறங்கிய தோனி 27 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ஓய்வு உறுதி?
சிஎஸ்கே ரசிகர்களே 'தல சீக்கிரம் தயவு செஞ்சு அவுட்டாகிடு' என்றும் புலம்பும் அளவுக்கு சென்றுவிட்டது தோனியின் நிலைமை. ஐபிஎல் தொடரில் அவர் முடித்துக் கொடுக்காத ஆட்டங்களா? சிக்ஸர்கள் சென்று விழாத ஸ்டேண்டுகளா? ஆனால், இன்று அவரால் பந்துகளை க்ளீயர் செய்யய முடியவில்லை. அவமானப்படுகிறார். ஆனால், ஒரு கேப்டனாக அவரது புத்திசாலித்தனத்தில் எந்த தொய்வும் ஏற்படவில்லை. ஆம்! மைதானத்துக்கு வெளியே அமர்ந்து, வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் ஒரு எனர்ஜி பூஸ்டராக இருக்க வேண்டிய நேரம் "தல"க்கு வந்துவிட்டது. இனி அவர் பேட் பிடிப்பதை விட, வெளியில் இருந்து வீரர்களுக்கு இன்புட்ஸ் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. புதிய புதிய இளம் திறமைசாலிகளை கண்டறிந்து இந்தியாவுக்கு அர்ப்பணிக்கும் நேரம் வந்துவிட்டது. வயதாகிவிட்டது தோனி. இனி உங்கள் சேவை வேறுமாதிரி தான் தேவை! இந்த சூழலில், டெல்லி அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு, சில முக்கிய நிர்வாகிகளிடம் மட்டும் பேசியிருக்கும் தோனி, இந்த சீசனோடு ஓய்வு பெற விரும்புகிறேன் என்று கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இனி ஒரு வீரராக சிஎஸ்கே நிர்வாகத்தில் தொடர் வாய்ப்பில்லை என்று தெரிகிறது. ஸோ, 2021 சீசன், ஒரு வீரராக தோனியின் ஐபிஎல் பயணத்தை முடிவுக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











