
டெல்லிக்கே வாய்ப்பு?
ஆம்! டெல்லி கேபிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையேயான போட்டி Qualifier 1 என்பதால், இதில் தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பிருக்கிறது. அதாவது, 3வது மற்றும் நான்காம் இடம் பிடித்த அணிகள் மோதும் ஆட்டத்தில் வெல்லும் அணியை, Qualifier 1-ல் தோற்ற அணி சந்திக்க வேண்டும். ஸோ, இரண்டு வாய்ப்புகள் உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், இந்த Qualifier 1 போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்பதற்கே அதிக வாய்ப்புள்ளது.

ஒரேயொரு வெற்றி
இதற்கு ஒரே காரணம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிர்ஷ்டமே இல்லாத துபாய் பிட்ச் தான். தோனியின் ஆர்மியிடம் சென்று 'துபாய்' என்று சொன்னாலே போதும்.. 'அய்யய்யோ!' என்று பீதியாகிவிடுவார்கள். காரணம், அங்கு சென்னை அவ்வளவு மோசமாக அடி வாங்கியிருக்கிறது. இந்த இரண்டாம் பாதி ஐபிஎல் தொடரில், துபாயில் விளையாடிய போட்டிகளில், சென்னை ஒரேயொரு போட்டியில் தான் ஜெயித்திருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக.

காப்பாற்றிய ருதுராஜ்
அந்த போட்டியில் கூட, டு பிளசிஸ், மொயீன் அலி ஆகியோர் பூஜ்யத்தில் அவுட்டாக, ரெய்னா 4, தோனி 3 என்று அணியே சர்வநாசமானது. ருதுராஜ் கெய்க்வாட் மட்டும் தனி ஆளாக நின்று 88 ரன்கள் அடிக்க, இறுதிக் கட்டத்தில் பிராவோ சில சிக்ஸர்களை பறக்கவிட, 156 ரன்களை தட்டுத் தடுமாறி எட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ். அதன் பிறகு மும்பை தங்களது மோசமான ஃபார்ம் காரணமாக 136 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, பிழைத்துக் கொண்டது சிஎஸ்கே. ஆனால், அதன் பிறகு துபாயில் விளையாடிய அனைத்து போட்டியிலும் தர்ம அடி தர்மலிங்கமாக உருமாறிவிட்டது சென்னை.

மனரீதியாக ஃபிக்ஸ்
அதன் பிறகு துபாயில் விளையாடிய அனைத்துப் போட்டியிலும் தோல்வி. டெல்லியிடமும், பஞ்சாபிடமும் செமத்தியாக உதை வாங்கியது. குறிப்பாக, பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல், 42 பந்துகளில் 98 ரன்கள் அடித்து ருத்ரதாண்டவம் ஆடியதை மறக்க முடியுமா? சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னமும் அந்த அடியில் இருந்து மீளவில்லை. இந்த சூழலில், அதே துபாய் பிட்சில், மீண்டும் டெல்லியை பிளே ஆஃபில் எதிர்க்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். துபாயில் விளையாடினால் நிச்சயம் "கைமா" என்று மனரீதியாகவே சென்னை வீரர்கள் ஃபிக்ஸ் ஆகிவிட்டதாக தெரிகிறது.

நம்பிக்கை குலையக் கூடாது
இந்நிலையில், அணி மீட்டிங்கிலும் இதுகுறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளது. அதில், இந்த துபாய பிட்ச் குறித்து தோனி பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இதில், அவர் சொன்ன முக்கிய விஷயம் என்பது "டெல்லி மேட்ச் குறித்து நாம் அலட்டிக் கொள்ள வேண்டாம்" என்பதே. "டெல்லிக்கு எதிரான போட்டியில் 'வெற்றி' என்பது மட்டுமே நமது முதல் குறிக்கோள். அதேசமயம், நமது வியூகங்களை மீறி நாம் அங்கே தோற்கிறோம் என்றால், உங்கள் நம்பிக்கையை விட்டுவிட வேண்டாம். ஏனெனில், அடுத்த Qualifier 2 போட்டி ஷார்ஜாவில் நடைபெறுகிறது. அங்கு நாம் நிச்சயம் வென்றுவிட முடியும். இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது மட்டுமே நமது இப்போதைய டார்கெட்டாக இருக்க வேண்டும். எனவே, டெல்லிக்கு எதிராக தோற்றால், நம்மால் கோப்பையை வெல்ல முடியாது என்று அர்த்தமாகாது. ஷார்ஜாவில் எந்த அணி விளையாடினாலும் நாம் வீழ்த்திவிடாலாம். ஆனால், எனக்கு தேவை என்னவெனில், 'உங்கள் நம்பிக்கை குலைந்து விடக் கூடாது'.

வெற்றி நமக்கு தான்
இம்முறை மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் வரவில்லை. இதுவே நமக்கு சாதகமான விஷயம் தான். இறுதிப் போட்டிக்கு மட்டும் நாம் முன்னேறிவிட்டால், எப்பேர்ப்பட்ட அணியாக இருந்தாலும் நாம் வீழ்த்திவிட முடியும். அந்த திறன் நம்மிடம் இருக்கிறது. ஸோ, இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது மட்டுமே இப்போது நமது ஒரே இலக்காக இருக்க வேண்டும். நமக்கு இரண்டு வாய்ப்புகள் இருப்பதால், நாம் அதை நிச்சயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இறுதிப் போட்டியும் துபாயில் தான் நடைபெற உள்ளது. மற்ற போட்டிகள் என்பது வேறு, இறுதிப் போட்டி என்பது வேறு. ஃபைனலுக்கு முன்னறிவிட்டாலே, துபாய் மட்டுமல்ல.. விண்வெளியில் போட்டி நடந்தாலும், வெற்றி நமக்கு தான்" என்று தோனி பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











