
பயிற்சி முகாம்கள் துவக்கம்
ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி துவங்கி மே மாதம் 30ம் வரை நடைபெறவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்நிலையில் ஏறக்குறைய அனைத்து ஐபிஎல் அணிகளும் இங்கிலாந்து தொடரில் இல்லாத மற்ற வீரர்களை கொண்டு தங்களது பயிற்சி முகாம்களை துவங்கியுள்ளன.

நேற்று முதல் பயிற்சி முகாம்
தொடர் துவங்குவதற்கு முன்னதாகவே தனது பயிற்சி முகாம் குறித்து சிஎஸ்கே அறிவித்திருந்தது. இதையொட்டி கடந்த புதன்கிழமை சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி உள்ளிட்ட வீரர்கள் சிலர் சென்னை வந்திருந்தனர். இந்நிலையில் நேற்றுமுதல் அவர்கள் தங்களது பயிற்சி முகாமை துவங்கியுள்ளனர்.

தோனி, ராயுடு, ருதுராஜ் பங்கேற்பு
இந்த பயிற்சி முகாமில் கேப்டன் எம்எஸ் தோனி, அம்பத்தி ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்களும் கடந்த ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள ஜெகதீசன், சாய் கிஷோர், ஹரி நிஷாந்த், ஹரிசங்கர் ரெட்டி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். கரண் ஷர்மா, பகத் வர்மா உள்ளிட்டோரும் கூடிய விரைவில் பங்கேற்கவுள்ளதாக அணியின் சிஇஓ காசி விஸ்வாதன் தெரிவித்துள்ளார்.

இரு வாரங்களில் மாற்றம்
மேலும் தற்போது நடுநிலையான இடங்களில் மட்டுமே அணிகள் ஆட வேண்டும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இந்த பயிற்சி முகாமை மும்பைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார். போட்டி துவக்கத்திற்கு முன்பு இரு வாரங்கள் அங்கு பயிற்சிகள் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

10ம் தேதி சிஎஸ்கே முதல் போட்டி
வரும் ஏப்ரல் 9ம் தேதி ஐபிஎல் 2021 தொடர் துவங்கவுள்ள நிலையில், 10ம் தேதி மும்பையில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் சிஎஸ்கே அணி மோதவுள்ளது. கடந்த சீசனில் ப்ளே-ஆப் சுற்றிற்குகூட முன்னேறாமல் வெளியேறிய நிலையில், இந்த ஆண்டு தனது 4வது கோப்பையை சிஎஸ்கே வெல்லும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











