சென்னை: ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டியில் குஜராத் அணி வெற்றிபெற 173 ரன்களை இலக்காக சென்னை அணி நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் முதல் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் முதலில் செய்ய வேண்டிய நிலைக்கு சென்னை அணி தள்ளப்பட்டதோடு, பெரிய இலக்கையும் நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சென்னை அணி சார்பாக வழக்கம் போல் ருதுராஜ் கெய்க்வாட் - கான்வே இணை களமிறங்கியது. முகமது ஷமி வீசிய முதல் ஓவரில் நிதானம் காத்த நிலையில், 2வது ஓவரை வீசிய நலக்கண்டே பந்துவீச்சில் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இதன் பின்னர் அடுத்தடுத்த பந்துகளில் சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசி அசத்தினார். இதன் காரணமாக பவர்பிளே ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சேர்த்தது.
ஒருபக்கம் சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 36 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். இதன் காரணமாக 10 ஓவர்கள் முடிவில் 85 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த சிவம் துபே 1 ரன்னில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். பின்னர் வந்த ரஹானே 17 ரன்களிலும், கான்வே 34 பந்துகளில் 40 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
தொடர்ந்து ரஷித் கான் பந்துவீச்சில் சிக்சர் அடித்த ராயுடு, அடுத்த பந்திலேயே 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 18 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 148 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. இந்த சூழலில் சிஎஸ்கே கேப்டன் தோனி களமிறங்க, ரசிகர்களின் கோஷம் உச்சத்தை தொட்டது. இதனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தோனி, மோகித் சர்மா பந்துவீச்சில் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, மொத்த மைதானமும் மயான அமைதிக்கு சென்றது.
பின்னர் கடைசி ஓவரை வீச ஷமி அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா பவுண்டரி அடிக்க, 3வது பந்தில் மொயின் அலி சிக்சர் அடித்தார். பின்னர் அடுத்த 3 பந்துகளில் வெறும் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஜடேகாவின் விக்கெட்டையும் வீழ்த்தினார். இறுதியாக சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது.