சிட்னி : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாமல் போனாலும், எதிர்காலத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அந்த அணி பக்கா ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்தி வருகிறது. சிஎஸ்கே அணி நாளைய நட்சத்திரங்களை அடையாளம் காணும் விதமாக இந்தியா முழுவதும் பல்வேறு கிரிக்கெட் பயிற்சி மையங்களை திறந்து வருகிறது.
சிஎஸ்கே அணி இந்தியாவின் மட்டுமல்லாமல் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் பயிற்சி மையங்களை திறந்து இருக்கிறது. இதன் மூலம் அந்தந்த நாடுகளில் உள்ள இளம் வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களை அடையாளம் கண்டு பின் ஐபிஎல் தொடருக்கு கொண்டு வர முடியும்.

இந்த நிலையில் கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த திறமையும் கொட்டிக் கிடக்கும் ஆஸ்திரேலியாவில் சிஎஸ்கே அணி தற்போது புதிய பயிற்சி மையத்தை திறந்து இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவுக்கு வெளியே திறக்கப்படும் மூன்றாவது பயிற்சி மையம் இதுவாகும். ஆஸ்திரேலியாவில் எப்போதுமே அதிரடி பேட்ஸ்மன்களுக்கும், ஆக்ரோஷ பவுலர்களுக்கும் பஞ்சமே கிடையாது.
இந்த நிலையில் சிட்னியில் பயிற்சி மையத்தை சிஎஸ்கே திறப்பதன் மூலம் பல இளம் வீரர்களை கண்டெடுத்து அவர்களுக்கு பயிற்சி கொடுக்க முடியும். அதன் மூலம் பல திறமையான வீரர்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் அவர்களை சிஎஸ்கே அணிக்காக தேர்வு செய்யவும் வாய்ப்பு இருக்கின்றது. இதன் மூலம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து பல திறமை வாய்ந்த, யாருக்கும் அறியப்படாத வெளிநாட்டு வீரர்களை சிஎஸ்கே இந்த கிரிக்கெட் அகாடமி மூலம் கண்டெடுத்து தங்களுடைய அணிக்கு கொண்டு வர முடியும்.
இதன் மூலம் சிஎஸ்கே அணியின் பலம் மேலும் அதிகரிக்கக்கூடும். இது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள இளம் வீரர்களை தேர்வு செய்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு சிஎஸ்கே அணி அழைத்துச் சென்று அங்கு உள்ள தங்களது பயிற்சி மையத்தில் கிரிக்கெட் போட்டிகளையும் நடத்தும். இதன் மூலம் சிறுவயதிலேயே இந்தியாவில் உள்ள வீரர்கள் வெளிநாடுகளில் சென்று பயிற்சி பெற்று அங்கு உள்ள ஆடுகளங்களில் விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள். இதனால் இது மறைமுகமாக இந்தியாவுக்கும் மிகப்பெரிய நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.