Exclusive: என் மகள் 'தியா'.. பெயர் வச்சது 'தல'.. வேற என்ன வேணும் - 'தோனி' ரசிகனின் பெருமிதம்
சென்னை: சரவணன் ஹரி.. இதுவரை நீங்கள் சேப்பங்கில் மேட்ச் பார்க்கச் சென்றிருந்தால், இவரை நீங்கள் பார்த்திருக்கலாம். முகம், உடம்பு என்று மஞ்சள் பெயிண்ட் அடித்து, தோனி.. தோனி என தனது குரலை விசில் சப்தங்களை விஞ்சி ஒலிக்கவிட்டுக் கொண்டிருப்பார்.
சச்சினுக்கு எப்படி ஒரு சுதிரோ, தோனிக்கு அப்படி ஒரு சரவணன். தனது வேலை நேரத்தைப் போக, மீதி நேரத்தில் இவரது சிந்தனையெல்லாம் தோனி.. தோனி.. அவ்வளவே.
கொரோனாவால் பாதியில் நிறுத்தப்பட்டிருக்கும் ஐபிஎல் 2021 தொடர் மீண்டும் எப்போது தொடங்கும் என்பது கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இப்போது அதற்கு வாய்ப்பில்லை.. அதுவும் இந்தியாவில் நடத்த வாய்ப்பில்லை என்ற நிலையில், அட்லீஸ்ட் வருட கடைசியில் ஏதாவது ஒரு வெளிநாடுகளிலாவது மீதமிருக்கும் தொடரை நடத்த வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது. குறிப்பாக, 2020 சீசனில் மிக மோசமாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு தொடரில் நம்பர்.1 அணியாக சீறிப் பாய்ந்தது. இதனால் சோர்ந்து கிடந்த தோனியின் ரசிகர்களுக்கு ஏக ஹேப்பி. சரி.. இதுபற்றி பேசலாம் என்று தோனியின் தீவிர ரசிகரான சரவணன் ஹரியை ஃபோன் காலில் பிடித்தோம்.

ஷார்ப்பா பேசுவார்
அவரிடம் நமது myKhel சார்பாக நாம் பேசிய போது, "தோனி முதன்முதலாக அறிமுகம் ஆனதில் இருந்து, அவரது ரசிகன் நான். அவரது சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்காக மட்டுமல்ல. அவரது தனிப்பட்ட குணங்களுக்காக. ரசிகர்களை ரொம்பவே நேசிப்பார். அதிகம் பேச மாட்டார். ஆனால், அவர் சொல்லும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவ்வளவு ஷார்ப்பாக இருக்கும்.

பெங்களூரில் அந்த நாள்
2014ம் ஆண்டு தான் முதன் முதலாக நான் தோனியை நேரில் சந்தித்தேன். அப்போது, சென்னை சேப்பாக் ஸ்டேடியத்தில் போட்டிகள் கேலரி பிரச்சனைகள் காரணமாக நடக்கவில்லை. அதனால், சிஎஸ்கேவின் ஹோம் கிரவுண்டாக ராஞ்சி இருந்தது. அந்த நேரத்தில், பெங்களூரில், சென்னையும் ஆர்சிபியும் மோதின. அந்த போட்டியின் போது தான், சிஎஸ்கே நிர்வாகம் என்னை தோனியிடம் அழைத்துச் சென்றது. அவரை முதன் முதலாக பார்த்த அந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாதது.

உடலில் பெயிண்ட் நல்லதா?
"என்னைப் பார்த்த உடனேயே, 'என்ன வேலை செய்கிறாய்? எவ்வளவு சம்பளம் வாக்குகிறாய்? என்று கேட்ட தோனி, பிறகு குடும்பத்தாரை விசாரித்தார். இறுதியாக, உடலில் இப்படி பெயிண்ட் அடிப்பது நல்லதல்ல. கவனமாக செயல்படு" என்றார். அவ்வளவு அக்கறையாக எண்ணப் பற்றி அவர் விசாரிப்பார் என்று நினைக்கவில்லை. ஏதோ, ஃபோட்டோ எடுத்து அனுப்பிவிடுவார் என்றே நினைத்தேன். என் வேலை முதல் குடும்ப சூழல் வரை அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டு தான் அனுப்பினார்.

வாழ்நாள் பெருமை
பிறகு, 2016ம் ஆண்டு தோனி சென்னை வந்திருந்த போது, அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது தான் எனக்கு மகள் பிறந்திருந்தாள். அதை அவரிடம் சொல்லி, என் மகளுக்கு பெயர் வைக்கும்படி கேட்டுக் கொண்டேன். உடனே 'நான் பெயர் வைக்கணுமா?' என்றார். 'ஆமா சார்! நீங்க தான் வைக்கணும். அது தான் என் மகளின் பெயர்' என்றேன். அதைக் கேட்டு சிரித்துக் கொண்டே, பிறகு 'தியா' (Diya) என்று என் மகளுக்கு தோனி பெயர் வைத்தார். இது என் வாழ்நாளில் கிடைத்த மிகச்சிறந்த பெருமையாக கருதுகிறேன். என் மகளுக்கு தோனி பெயர் வைத்தார் என்று வாழ்நாள் முழுவதும் காண்போரிடம் சொல்லி மகிழ்வேன் என்ற நெகிழ்ச்சியாக.
அதுமட்டுமின்றி, "இந்த சீசனின் மீதமுள்ள போட்டியை எப்போது நடத்தினாலும், சாம்பியன் சிஎஸ்கே தான்" என்று சொல்லி முடித்தார்


Click it and Unblock the Notifications