லண்டன்: 2008ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர் சுரேஷ் ரெய்னா. இந்திய அணியின் கேப்டனாக இருந்த போதும் சரி, சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த போதும் சரி.. சுரேஷ் ரெய்னா அளவிற்கு தோனி வேறு யாருக்கும் ஆதரவாக நின்றதில்லை. 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் உத்தப்பாவை விளையாட வைக்கும் முடிவை கூட ரெய்னாவை ஆலோசித்த தோனி எடுத்தார்.
அதேபோல் இந்திய அணியிலும் விராட் கோலிக்கு முன் தோனியின் தளபதியாக இருந்தவர் சுரேஷ் ரெய்னா தான். 2015 உலகக்கோப்பை தொடர் வரை சுரேஷ் ரெய்னாவின் ஆட்டம் உச்சத்தில் இருந்தது. ஆனால் விராட் கோலியின் எழுச்சிக்கு பின் ரெய்னா ஃபார்மை இழக்க, இந்திய அணியில் இருந்து ரெய்னா நீக்கப்பட்டார். ஆனாலும் தோனி மீதான அன்பை ரெய்னா ஒருநாளும் வெளிப்படுத்தாமல் இருந்ததில்லை.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வை அறிவித்த சில மணி நேரங்களிலேயே சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார். அதன்பின் சிஎஸ்கே அணி ரெய்னாவை ஏலத்தில் வாங்காத போதும், சிஎஸ்கே அணிக்காக ஒவ்வொரு போட்டியிலும், வர்ணனையிலும் சுரேஷ் ரெய்னா ஆதரவாக இருந்து வருகிறார். இதன் காரணமாகவே சிஎஸ்கே ரசிகர்கள் ரெய்னாவை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் சமீப காலங்களாக GOAT வீரர் யார் என்ற விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் சுரேஷ் ரெய்னாவும் இணைந்துள்ளார். லெஜன்ஸ்ட் லீக் தொடரில் விளையாடி வரும் சுரேஷ் ரெய்னா, தொகுப்பாளர் ஒருவருடன் உரையாடலில் ஈடுபட்டார். அப்போது GOAT என்ற வார்த்தையை கேட்கும் போது எந்த வீரர் சுரேஷ் ரெய்னாவின் நினைவில் வருவார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சுரேஷ் ரெய்னா, உடனடியாக தோனி பெயர் தான் நினைவுக்கு வருவதாக தெரிவித்துள்ளார். அதேபோல் விராட் கோலியை கிங் என்றும், சுப்மன் கில்லை "எதிர்காலம்" என்றும், பும்ராவை "கிங் ஆஃப் டெத் ஓவர்ஸ்" என்று ரெய்னா அழைத்துள்ளார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
இதனிடையே லெஜண்ட்ஸ் லீக் தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்தில் நடந்து வரும் லெஜண்ட்ஸ் லீக் அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடவுள்ளது. இன்று இரவு நடக்கவுள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.