சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இன்னும் ஒரு வெற்றியை பெற்றால் போதும். ஆனால் முதல் இரண்டு இடங்களை பிடிக்க வேண்டும் என்றால் சிஎஸ்கே அணி எஞ்சிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும்.
அப்போதுதான் குவாலிஃபயர் ஒன்றில் நாம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட முடியும். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் வெற்றி குறித்து பேசிய ருதுராஜ் கெய்க்வாட், ஆட்டம் தொடங்கியதற்கு முன்பே இனிவரும் ஆட்டம் முக்கியமானவை என்று கேப்டன் டோனி கூறியதாக தெரிவித்தார்.

அவர் பேசுகையில் தோனி எங்களிடம் இன்னும் நான்கு ஆட்டம் தான் இருக்கிறது. இதில் அனைத்திலும் நாம் வெற்றி பெற வேண்டும். அதில் மட்டும் தான் நமது கவனம் இருக்க வேண்டும் என்று கூறினார். டெல்லிக்கு எதிரான வெற்றி திருப்தி அளித்தாலும் இன்னும் பேட்டிங்கில் முன்னேற வேண்டும். புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
சென்னை ஆடுகளம் தற்போது தொய்வாக இருக்கிறது. இதில் நாங்கள் டாஸ் வென்று பேட்டிங் செய்தது சரியான முடிவாக அமைந்தது. ஜடேஜா ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தற்போது மூன்று ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார்.

அவருடைய வீட்டில் பரிசு கோப்பைகளால் நிறைந்திருக்கும் என நினைக்கிறேன். அவர் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் பேட்டிங்கிலும் முக்கிய கட்டத்தில் வந்து 20 ரன்களை அடித்து விடுகிறார். சென்னை ஆடுகளத்தில் அவர் சிறந்த வீரராக விளங்குகிறார். அவரை எதிர்கொள்வது எதிரணிக்கு மிகவும் கடினமாக இருக்கிறது.
மதிஷா பதிரானாவும் தொடர்ந்து நம்பிக்கையை பெற்று வருகிறார். ஆடுகளத்திற்கு வெளியேவும் அனைவராலும் ரசிக்கக்கூடிய மனிதராக பதிரானா திகழ்கிறார். இனி வரும் ஆட்டங்களில் எங்களுடைய திறமைகளை நம்பி அதிரடியாக ஆட வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்திற்கு விளையாடுவோம் என்று ருதுராஜ் கூறினார். ருதுராஜ் கடைசி நான்கு முக்கிய ஆட்டம் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருப்பது தோனி ஓய்வு பெறுவது மறைமுகமாக சொல்கிறாரோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.