மும்பை: டோணி இல்லாத ஐபிஎல் அணியை நினைத்து பார்க்கவே முடியவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார் முன்னாள் ஜாம்பவான் பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர்.
கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜ்குந்த்ரா ஆகியோர் தொடர்பு வைத்திருந்த சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளில் ஆட தடை விதித்து நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டி நேற்று உத்தரவிட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்து கவாஸ்கர் கூறியது: டோணிக்கு தற்போது 34 வயதாகிறது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் கிரிக்கெட்டுக்கு அவர் 'குட்பை' சொல்லிவிடுவார். இந்த சூழ்நிலையில் டோணி இல்லாத ஐபிஎல் போட்டியை நினைத்து பார்க்கவே முடியவில்லை.
சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி வீரர்கள் தற்போது கடும் மன உளைச்சலில் இருப்பார்கள். எந்த தப்பும் செய்யாத அவர்களும் தண்டனைக்குள்ளாகியுள்ளனர். சூதாட்டத்தில் தொடபுள்ள வீரர்கள் தண்டனைக்குள்ளானபோது, இத்தோடு விவகாரம் முடிந்தது என்றுதான் பிற வீரர்கள் நினைத்திருந்தனர்.
இருந்தாலும், மூத்த நீதிபதிகள் அடங்கிய கமிட்டியின் தீர்ப்பை ஏற்றுத்தான் ஆக வேண்டும். அதன் நம்பகத்தன்மை மீது சந்தேகப்பட முடியாது. அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கு முன்பாக, 2 அணிகளை உருவாக்க, பிசிசிஐக்கு இன்னும் 8 மாத காலம் அவகாசம் உள்ளது. இது போதுமானது.