சென்னை: ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது முதல் போட்டியில் களமிறங்கிய இடது கை வேகப்பந்துவீச்சாளர் குர்ஜப்நீத் சிங், அரியதொரு சாதனையைப் படைத்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், தனது முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
27 வயதான தமிழகத்தைச் சேர்ந்த குர்ஜப்நீத் சிங், டெல்லி கேபிடல்ஸ் அணியின் 213 ரன்கள் இலக்கை நோக்கி ஆடியபோது, ஏழாவது ஓவரில் பந்துவீச வந்தார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்ஸர் படேலை, சர்பராஸ் கானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டக்கினார். கட் ஷாட் அடிக்க முயன்ற அக்ஸர், இரண்டு பந்துகளில் ஒரு ரன் மட்டுமே அடித்து வெளியேறினார்.

மேட் ஹென்றிக்குப் பதிலாக சென்னை அணியின் விளையாடும் லெவனில் குர்ஜப்நீத் சிங் இடம் பெற்றார். ஐபிஎல் அரங்கில் ஒரு பந்துவீச்சாளர் தனது டி20 அறிமுகப் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்துவது என்பது மிகவும் அரிதான சாதனை ஆகும். இந்தச் சாதனையைப் படைத்த 11-வது வீரர் என்ற பெருமையை குர்ஜப்நீத் சிங் பெற்றார்.

ஐபிஎல் வரலாற்றில் முதன்முதலாக இந்தச் சாதனையை நிகழ்த்தியவர் இஷாந்த் ஷர்மா. அவர் 2008 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடிய முதல் பந்திலேயே ராகுல் டிராவிட்டை வீழ்த்தினார். இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 2008, ஏப்ரல் 18 அன்று நடைபெற்றது.
குர்ஜப்நீத் சிங்கிற்கு முன் இந்தச் சாதனைப் பட்டியலில் பல வீரர்கள் இணைந்துள்ளனர். வில்கின் மோட்டா, ஷேன் ஹார்வுட், அமித் சிங், அல்ஜாரி ஜோசப் போன்றோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். குறிப்பாக, மதீஷா பத்திரனா (மே 15, 2022) மற்றும் அஷ்வனி குமார் (மார்ச் 31, 2025) ஆகிய இருவர் மிகச் சமீபத்தில் இந்தச் சாதனையை புரிந்தனர். இதில் மதீஷா பத்திரனா குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராகவும், அஷ்வனி குமார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராகவும் தங்களது முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியிருந்தனர்.