சென்னை: குஜராத் அணிக்கு எதிரான சென்னை அணி விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது சிஎஸ்கே ரசிகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு சீசனுக்கான பிளே ஆப் சுற்று நாளை தொடங்கவுள்ளது. பிளே ஆப் சுற்றின் முதல் இரு போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும், கடைசி இரு போட்டிகள் அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திலும் நடக்கவுள்ளது. பிளே ஆப் சுற்றின் முதல் குவாலிஃபயர் போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் மோதவுள்ளன.

டிஃபெண்டிங் சாம்பியனான குஜராத் அணி, நடப்பு சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 10ல் வெற்றியும், 4ல் மட்டுமே தோல்வியும் அடைந்து முதலிடத்தில் உள்ளன. அதேபோல் சென்னை அணி 14 போட்டிகளில் 8 வெற்றி, 5 தோல்வி, ஒரு ஆட்டம் ரத்து என்று 17 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளன. இதனால் குவாலிஃபயர் முதல் போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே குஜராத் அணிக்கு எதிரான சென்னை அணியின் ரெக்கார்ட் சிஎஸ்கே ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான குஜராத் அணி முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்றது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு முதல் குஜராத் - சென்னை அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் நடைபெற்றுள்ளது.
அந்த 3 போட்டிகளிலும் குஜராத் அணியே வெற்றிபெற்றுள்ளது. ஒரு போட்டியில் கூட சென்னை அணி வெற்றிபெறாததால், சிஎஸ்கே ரசிகர்கள் அச்சத்தில் உள்ளனர். இருப்பினும் இந்த மூன்று போட்டிகளிலும் அகமதாபாத் மற்றும் மும்பை மைதானங்களிலேயே ஆடப்பட்டுள்ளது. முதல்முறையாக குஜராத் அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளது.
ஆனால் சென்னை அணிக்கு சேப்பாக்கம் மைதானம் ஒரு கோட்டை போல் உள்ளது. இதனால் சென்னை அணியின் கோட்டையில் குஜராத் அணி என்ன செய்யப் போகிறது என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது. சுழலுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால், ரஷித் கான், நூர் அஹ்மத் மற்றும் ஜெயந்த் யாதவ் ஆகியோர் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.